பள்ளிகள் திறந்ததும் அப்படியே வந்து விடக்கூடாது.. இதெல்லாம் அவசியம்.. வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்குச் செல்லலாம் என்று என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்கள் பிரிவு அடிப்படையில் வகுப்புக்கு வரலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நடத்தை விதி முறைகளையும் அரசு செய்திக்குறிப்பு விளக்கமாக தெரிவித்துள்ளது.
மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது முன்கூட்டியே ஸ்லாட் ஒதுக்கப்பட்டு அதற்கு உரிய நேரத்துக்கு செல்ல வேண்டும். மொத்த வகுப்பறை எண்ணிக்கையில் 50 விழுக்காட்டிற்கு மிகாமல் மாணவர்கள் ஒரே நேரத்தில் வகுப்பறைக்குள் செல்லும்படி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
வட்டம் போட வேண்டும்
சமூக இடைவெளியை பராமரிப்பதற்காக வகுப்பறையில் தரைப் பகுதியில் வட்டம் போட்டு காட்டப்பட்டிருக்க வேண்டும். அந்த குறியீட்டுக்கு உள்ளேதான் மாணவர்கள் நிற்க வேண்டும். பள்ளியின் நுழைவாயில் மற்றும் வெளியே செல்லக் கூடிய வாயிலில், ஒரே நேரத்தில் அதிக கூட்டம் கூடிவிடக் கூடாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
கட்டுப்பாட்டு மண்டலம்
பள்ளிகளுக்கு வெளியே மாணவர்கள் வீணாக சுற்றி திரிய அனுமதி கிடையாது. கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியில் வசிக்கக்கூடிய மாணவர்கள், வெளியூர் பயணத்தின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. ஆசிரியர்களிடம் தொலைபேசி வாயிலாக இவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
6 அடி இடைவெளி
வகுப்பறைக்குள் மாணவர்கள் இடையே மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் அறை, அலுவலக அறை உள்ளிட்டவற்றிலும் சமூக இடைவெளி பராமரித்தல் அவசியம். வானிலை நல்லபடியாக இருக்குமானால் வகுப்பறைக்கு வெளியே திறந்த வெளியில் ஆசிரியர்களை மாணவர்கள் சந்திப்பது நலம் பயக்கும். மாணவர்கள் ஒன்று கூட கூடிய அசெம்பிளி, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பள்ளியில் நீச்சல் குளம் இருக்குமானால் அது தொடர்ந்து மூடப்பட்டு இருக்க வேண்டும்.
சுத்தம் அவசியம்
மாணவர்களை பள்ளிக்கு அழைத்து முன்பாக வகுப்பறைக்குள் உள்ள, நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களின், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்படவேண்டும். ஒரு சதவீதம் சோடியம் ஹைப்போ குளோரைட் சொல்யூஷன் கொண்டு சுத்தம் செய்தல் அவசியம். இதற்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பள்ளி ஆரம்பிக்கும் முன்பாக இதுபோல சுத்தப்படுத்துதல் அவசியம்.
சோப், சானிட்டைசர்
பள்ளிகளில் குழாயில் தண்ணீர் திறந்துவிட்டால் தண்ணீர் வரும்படியான வசதி இருக்க வேண்டும். அதன் அருகே சோப் வைத்திருக்க வேண்டும். சானிட்டைசர்கள் வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கைகளை சோப்பு அல்லது சானிட்டைசர் போட்டு கழுவிய பிறகுதான் வகுப்பறைக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். ஆல்கஹால் கொண்ட சானிடைசர் ஒவ்வொரு நுழைவாயில் பகுதியில் இருக்க வேண்டும்.
பயோமெட்ரிக்
கழிப்பிடம் உள்ளிட்ட அவ்வப்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வந்து செல்லக்கூடிய இடங்களில் முறையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும். அங்கும் சமூக இடைவெளி கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு செய்யாமல் வேறு வகையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
ஏசி வசதிகள்
பள்ளிகளில் சுகாதாரத்துறை அவசர தொடர்பு எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். முடிந்த அளவுக்கு குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது. வேறுவழியில்லாமல் குளிர்சாதன வசதியை பயன்படுத்த வேண்டுமானால் மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி அதை பயன்படுத்த வேண்டும். 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் அளவுக்குள்தான் குளிர் சாதன பெட்டியில் வெப்பம் பராமரிக்கப்பட வேண்டும். அதற்கு கீழே செல்லக்கூடாது. ஜன்னல் உள்ளிட்டவற்றை திறந்து வைக்க வாய்ப்பு இருந்தால் அதை செய்து குளிர்சாதன வசதியை பயன்படுத்தலாம்.
வழிகாட்டுதல்
பள்ளிகள் வரும் முன்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யலாம். தும்மல் அல்லது இருமல் வந்தால் வாய் மற்றும் முகத்தை மூடிக்கொண்டு அதை செய்ய வேண்டும். இதற்கு முழங்கையை பயன்படுத்தலாம். அல்லது டிஷ்யூ பேப்பர், கர்ச்சீப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். பிறகு அவற்றை உரிய முறையில் கழிவுகள் போடப்பும் இடத்தில் போட வேண்டும். உடலில் நோய் பாதிப்பு ஏற்படுவது போல தெரிந்தால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அது பற்றி தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அரசு வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.