செப். 1 முதல் அமலுக்கு வந்த.. வீட்டுத் தனிமையின் புதிய விதிகள்.. இதை நல்லா தெரிஞ்சு வச்சுக்கங்க!
சென்னை: செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து விமானம், கப்பல், ரயில், சாலை மார்க்கமாக தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு வீட்டுத் தனிமைக்கான புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய சோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான தேவைகள் குறித்த புதிய விதிகளை அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என கூறியுள்ளது.
தமிழகத்தில் 8-ஆம் கட்டமாக லாக்டவுன் இந்த மாதம் முழுவதும் அமலில் உள்ளது. இந்த நிலையில் பொது போக்குவரத்து, ஷாப்பிங் மால்கள் திறப்பு, மெட்ரோ ரயில் சேவை, இ பாஸ் ரத்து என அரசு ஏராளமான தளர்வுகளை அளித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்கள்.. காலை மற்றும் மாலையில் மட்டுமே ஓடும்.. டைம் டேபிள் அறிவிப்பு
அமல்
இந்த நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலில் புதிய விதிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை இந்த மாதம் வரை அமலில் இருக்கும்.
சாலை மார்க்கம்
மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வருவோர் கவனத்திற்கு:
1. தெர்மல் பரிசோதனை கட்டாயம்
2. வெளிமாநிலங்கள், மற்ற யூனியன் பிரதேசங்களிலிருந்து தமிழகத்திற்கு வருவோர் நிச்சயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் ஒருவருக்கு காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும்.
3. மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து வருவோருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படும். ஒரு வேளை ஒருவருக்கு அறிகுறிகளுடன் கொரோனா உறுதியாகிவிட்டால், அவருக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்படும். ஒருவேளை ஒருவருக்கு அறிகுறி இல்லாமலேயே கொரோனா உறுதியானால், அவர் கோவிட் கேர் சென்டருக்கு அழைத்து செல்லப்படுவார்.
கொரோனா இல்லை
4. ஒருவேளை ஒரு பயணிக்கு அறிகுறியும் இல்லை, கொரோனாவும் இல்லை எனில், அவர் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார். ஒரு வேளை அறிகுறி இருக்கிறது, கொரோனா இல்லை எனில், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரை சோதனை செய்யும் மருத்துவர் முடிவு எடுப்பார்.
5. தொழில் நிமித்தமாக தமிழகத்திற்கு வந்துவிட, தமிழகத்திற்குள் நுழைய 72 மணி நேரத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் நபர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
6. அனைத்து பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயம்.
கப்பல் மூலம்
வெளிநாடுகளிலிருந்து விமானம், கப்பல் மூலம் தமிழகத்திற்கு வருவோர் கவனத்திற்கு:
1. தெர்மல் பரிசோதனை கட்டாயம்
2. அனைத்து பயணிகளும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் ஒருவருக்கு காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும்.
3. மற்ற நாடுகளிலிருந்து தமிழகம் வரும் பயணிகள் வருகை தந்த 96 மணி நேரத்திற்குள் தங்களுக்கு கொரோனா இல்லை என்ற மருத்துவ பரிசோதனை அறிக்கையை வைத்திருக்க வேண்டும்.
4. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் மூலம் தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு மட்டும் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஒரு வேளை அதில் அவர்களுக்கு கொரோனா உறுதியானால் அவர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுவர்.
5. தமிழகத்திற்கு வந்த 96 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை எடுத்து அறிகுறியும் இல்லை கொரோனாவும் இல்லை என்றால் மட்டுமே அவர்கள் வீடு செல்ல அனுமதிக்கப்படுவர். அங்கு அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இ பாஸ் கட்டாயம்
6. மற்ற நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியம் ஆகும். ஒருவேளை அவர்களுக்கு கொரோனாவும் இருந்தும் அறிகுறியும் இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவர். கொரோனா மட்டும் இருந்து அறிகுறி இல்லாவிட்டால் அவர்கள் கோவிட் கேர் சென்டருக்கு அழைத்து செல்லப்படுவர். ஒரு வேளை அறிகுறி இருக்கிறது, கொரோனா இல்லை எனில், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரை சோதனை செய்யும் மருத்துவர் முடிவு எடுப்பார். ஒருவேளை ஒரு பயணிக்கு அறிகுறியும் இல்லை, கொரோனாவும் இல்லை எனில், அவர் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்.
7. வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வரும் அனைவருக்கும் இ பாஸ் அவசியமாகும்.