அம்பத்தூர் எக்சேஞ்ச்.. நசரத் பேட்டை ஜங்ஷன்.. போரூர் டோல்கேட்.. ரொம்ப கவனம் மக்களே!
Recommended Video
சென்னை: தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள்.. உயிர் பறிக்கும் எமனாக தொடர்வது ஒரு சோகக் கதை. தமிழகத்தில் 846 இடங்களை அபாயகரமான பகுதிகளாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை கண்டறிந்து தெரிவித்துள்ளது.
இந்த 846 இடங்களிலும் அதிக அளவிலான விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே இந்த பகுதிகளில் மக்கள் பயணிக்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் முன்பு போல இப்போது இல்லை. நிறைய வசதிகள் வந்து விட்டன. சாலைகள் அகலமாகி விட்டன. ரிலாக்ஸ்டாக போகும் அளவுக்குத்தான் இப்போதைய சாலைகள் உள்ளன. ஆனாலும் விபத்துகளுக்கு குறைவில்லை. அதுவும் ஒரு பக்கம் அதிகமாகிக் கொண்டேதான் போகிறது. உயிரிழப்புகளையும் தடுக்க முடியவில்லை.
உயிரிழப்பு அதிகரிப்பு
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இதுவரை 38 சதவீத அளவுக்கு உயிரிழப்புகள் சாலை விபத்துக்களில் அதிகரித்துள்ளன. இது அனைத்துத் தரப்பையும் கவலை கொள்ளச் செய்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அபாயகரமான பகுதிகளாக 846 இடங்களை மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அடையாளம் கண்டுள்ளது.
விபத்து குறைப்பு நடவடிக்கைகள்
இந்த இடங்களில் விபத்துக்களைக் குறைக்க தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசையும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 12,177 விபத்துகள் நடந்துள்ளன என்று புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 அபாயகரமான இடங்கள்
சென்னையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளைப் பொறுத்தவரை 3 இடங்கள் மிகவும் அபாயகரமான விபத்துப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. என் எச் 44ல், சிடிஎச் சாலையில் மண்ணூர்ப்பேட்டையில் உள்ள அம்பத்தூர் எக்சேஞ்ச் பகுதி மிக மிக அபாயகரமான பகுதியாக உள்ளது. இங்கு இந்த ஆண்டு இதுவரை 775 விபத்துக்கள் நடந்துள்ளன. இங்குதான் உயிரிழப்பும் அதிகம்.
உயிரிழப்புகள்
அடுத்த இடத்தில் இருப்பது பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நசரத்பேட்டை சந்திப்பு. இங்கு இதுவரை 520 விபத்துக்கள் நடந்துள்ளன. 3வது இடத்தில் இருப்பது தாம்பரம் - புழல் பாபைஸ் சாலையில் உள்ள போரூர் டோல்கேட் பகுதி. இங்கு 423 விபத்துக்கள் நடந்துள்ளன என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.