வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவெடுத்துள்ளது தமிழகம்... அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம்
சென்னை: புதிய தொழிற் கொள்கை மூலம் தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவெடுத்துள்ளதாக, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று, தொழில்துறை மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், ராமச்சந்திரன் தமிழகத்தில் உள்ள தொழில் வளர்ச்சியின் நிலை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழகத்தில் புதிய தொழிற் கொள்கை மூலம் தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், கடலூர் சிப்காட்டில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
பின்னர் பேசிய ஊரகத்தொழில் துறை அமைச்சர், மத்திய அரசின் நீம் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் புதியதாக 14 ஆயிரத்து 500 வேலைவாய்ப்புகளும், சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூலம் 2 லட்சத்து 52 ஆயிரம் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்திலிருந்து தொழில் நிறுவனங்கள் வெளி மாநிலங்களுக்கு செல்வதாக திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் உள்ள பெரிய நிறுவனங்கள் விரிவாக்கத்திற்காகவே வேறு மாநிலங்கள் செல்வதாகக் குறிப்பிட்டார்.
அதே நேரம், நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நாளை முதல் 29% ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.