தமிழகத்தில் கொரோனாவுக்கு 63 மருத்துவர்கள் பலி... சென்னையில் 12 பேர் பலி... ஐஎம்ஏ!!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை மொத்தமாக 63 மருத்துவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும், இவர்களில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு எத்தனை மருத்துவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் தங்களிடம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் லோக் சபாவில் தெரிவித்து இருந்தார்.
ஆஹா, ஓஹோன்னு பேசப்பட்ட.. ரஷ்ய கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவு.. 7ல் ஒருவருக்கு பாதிப்பு
பாசாங்குத்தனம்
இதற்கு இந்திய மருத்துவக் கழகம் கடுமையான கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தது. மருத்துவர்களையும் சுகாதாரப் பணியாளர்களையும் ஹீரோக்கள் போல் பேசிக் கொண்டே மறுபக்கம் தங்களது பாசாங்குத்தனத்தை மத்திய அரசு வெளிக்காட்டியுள்ளது என்று தெரிவித்து இருந்தனர்.
இழப்பீடு
மேலும் இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு 382 மருத்துவர்கள் பலியாகி இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். கடந்த புதன் கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''இவர்களை தியாகிகள் என்று அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். அவர்களது குடும்பத்தினரும், குழந்தைகளும் மத்திய அரசின் இழப்பீடு மற்றும் ஆறுதல் பெறுவதற்கு தகுதியாகின்றனர்.
காப்பீடு
இந்தியா இழந்து இருப்பதைப் போன்று வேறு எந்த நாடும் மருத்துவர்களை கொரோனாவுக்கு இழக்கவில்லை. மருத்துவர்களுக்கு என்று அறிவித்த காப்பீட்டுத் தொகையும் இன்னும் மருத்துவர்களுக்கு வந்து சேரவில்லை. ஆனால், இது மாநிலத்தின் கீழ் வருவதால், மாநிலங்கள்தான் பொறுப்பு என்று மத்திய அரசு கூறுகிறது'' என்று தெரிவித்து இருந்தனர்.
சேகரிப்பு
இந்த நிலையில் சென்னையில் இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழ்நாடு தலைவர் டாக்டர் சிஎன் ராஜா கூறுகையில், ''தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்த மருத்துவர்கள் குறித்த புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறோம். இதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அலுவலர்களை கேட்டு கொண்டுள்ளோம்.
நோக்கம்
தமிழ்நாட்டில் உயிரிழந்த மருத்துவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு, அவர்களது குடும்பத்துக்கு இழப்பீடு கோரி வருகிறோம். ஆனால், இங்கு அரசியல் செய்யப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் விவரங்களை வெளியிடுவதன் நோக்கமே மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து ஆறுதலும், இழப்பீடும் கிடைக்க வேண்டும் என்பதுதான்.
மாநில அரசு
ஆனால், இங்கு அரசியல் செய்யப்படுகிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது. மாவட்டங்களில் இருந்து இதுகுறித்த புள்ளி விவரங்களை சேகரித்து மாநில அரசே வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். தற்போது சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு புள்ளி விவரங்களை சேகரிப்பதற்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. மாநில அரசு இந்த தகவலை சேகரித்து வெளியிடட்டும்'' என்றார்.
தமிழகத்தில் இல்லை
டெல்லியில் இருக்கும் இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டு இருக்கும் தகவலில் இருந்துதான் தமிழ்நாட்டில் 63 மருத்துவர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்து இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், தமிழக அரசோ அல்லது இந்த கழகத்தின் தமிழ்நாடு கிளையோ எந்த தகவலையும் வெளியிடவில்லை.