TN Lockdown: தினந்தோறும் புது புது கட்டுப்பாடுகள்.. தமிழ்நாட்டில் விரைவில் முழு லாக்டவுன்?
சென்னை: கொரோனா மூன்றாவது அலை இந்த மாதம் துவங்க இருப்பதாக வல்லுனர்கள் கணித்துள்ள நிலையில், தமிழகத்தில் படிப்படியாக கட்டுப்பாடுகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
Recommended Video
கடந்த சில நாட்களாகவே, தமிழ்நாடு அரசு புதிதாக கட்டுப்பாடுகளை கொண்டு வந்து கொண்டு மக்கள் அதிக அளவு கூடுவதை தவிர்ப்பதற்கு முடிந்த அளவுக்கு என்ன செய்யமுடியுமோ அந்த நடவடிக்கைகளை துவங்கிவிட்டது.
தமிழக அரசின் உத்தரவுகளை வைத்துப்பார்த்தால் விரைவில் தமிழகம் முழுக்க லாக்டவுன் அமல்படுத்தப்படுமோ என்ற சந்தேகங்கள் மக்களிடம் எழுந்துள்ளன.
சென்னையில் 9 இடங்களுக்கு கட்டுப்பாடு
முதல் கட்டுப்பாடு நடவடிக்கை, மாநில தலைநகரம் சென்னையில் ஆரம்பித்தது. ரங்கநாதன் தெரு , வடக்கு உஸ்மான் சாலை, மாம்பலம் , புரசைவாக்கம் , அமைந்தகரை, ஜாம்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 9 இடங்களில் கடைகள் மற்றும் வணிகவளாகங்கள், திறக்க தடை விதிக்கப்படுவதாக கடந்த வாரம் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த பகுதிகளில் மக்கள் பெரும் அளவிற்கு ஒரே இடத்தில் கூடுவார்கள் என்பதால் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.
ஆலயங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
அடுத்ததாக, தமிழகத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் ஆடி கிருத்திகை விழா மற்றும் அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டம் என பொது மக்கள் அதிகம் கூடுவதால் அதைதடுக்க, கோயில்களில் 3 நாளுக்கு தரிசனம் ரத்து எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான பிரசித்தி பெற்ற கோவில்களில் நேற்று முதல் 3 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம்
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் திருக்கோவில், பழமுதிர்ச்சோலை முருகன் ஆலயம் ஆகியவை வரும் 8ம் தேதி வரை மூடப்படும் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஶ்ரீரங்கம் கோவில், வயலூர் முருகன் கோவில், திருவானை கோவில் , மலைக்கோட்டை வளாக கோவில்கள் மற்றும் உறையூர் வெக்காளியம்மன் கோவில்களில் இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கும் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் கொரோனா பரவலின் காரணமாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்றங்கரையில் மக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும் அனுமதி இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு அறிவித்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை, ஆடி 18ம் நாட்களை முன்னிட்டு நேற்று முதல் 3ம் தேதி வரையும், ஆடி அமாவாசையான வருகிற 8ம் தேதி ஆகிய விஷேச நாட்களில் அதிக பக்தர்கள் கூடுவார்கள். இந்த 4 நாட்களில் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இந்த நாட்களில் கோவிலில் ஆகமவிதிகளின் படி அனைத்து நிகழ்ச்சிகளும், கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதேபோல தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குலசை, ஞானமூர்த்தி சமேத, முத்தாரம்மன் கோவிலிலும், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் ஏமாற்றம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் நேற்று இரவு தெரிவித்து. தாமதமான இந்த அறிவிப்பால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ரவுண்டானா சாலை முன்பு உள்ள நுழைவாயில் முன்பு காவல்துறையினர் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் ரவுண்டானா சாலை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்கள், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், படவேடு ரேணுகாம்பாள் கோவில் உட்பட பிரதான கோவில்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு 3ம் தேதி வரை சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவில், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில், பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவில் ஆகியவற்றில் வரும் 9ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் படித்துறைகளில் ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது உள்ளிட்ட பிற சடங்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.
முழு ஊரடங்கு
வியாபாரிகள் அதிகமாக கூடியதால், மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டை தற்காலிகமாக மூட மதுரை கலெக்டர் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல பிற பெரிய நகரங்களில் உள்ள மொத்த சந்தைகள் மூடப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த இன்னும் பல நடவடிக்கைகள் தமிழக அரசின் வசம் இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்தவாரம் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். வழக்கமாக ஊரடங்கு நீட்டிப்பின்போது, ஏதாவது தளர்வுகள் அறிவிக்கப்படும். ஆனால் இந்த முறை அது போன்ற எந்தத் தளர்வும் அறிவிக்கப்படவில்லை. வெளிமாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்துக்கு, தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த சிக்னல்களை வைத்து பார்த்தால், இந்த மாத இறுதிக்குள் தமிழ்நாடு முழுக்க முழுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.