கேரளாவில் கொரோனா பாசிட்டிவ் ரேட் அதிகரிப்பு.. தமிழக எல்லையில் வாகன சோதனை, கட்டுப்பாடு தீவிரம்
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அண்டை மாநிலமான கேரளா உடனான எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார் .
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய்த்தொற்று குறைவடைந்து வந்த போதிலும், அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை .
இந்த நிலையில்தான் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு நோய் பரவல் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஒலிம்பிக் அணிவகுப்பில்.. கொரோனா தடுப்பு விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்.. வறுக்கும் நெட்டிசன்கள்!
சோதனை சாவடிகள்
இதுகுறித்து தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாடு மற்றும் கேரளா இடையேயான சுங்கச்சாவடிகளில் கூடுதலாக தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன . கேரளாவில் நோய்த்தொற்று அதிகரித்திருப்பதை அறிந்து இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
போக்குவரத்து
இப்போது தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பதிவு நடைமுறை அவசியம் இல்லை என்று தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் பொதுப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், கேரளாவிலிருந்து எந்தவித தடைகளும் இல்லாமல் தமிழகத்துக்குள் மக்கள் வருகை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
கேரளாவில் பாசிட்டிவ் ரேட் அதிகம்
கேரளாவில் கடந்த சில நாட்களில் டெஸ்ட் நேர்மறை விகிதம் (டிபிஆர்) அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிவித்தார். கேரளாவில் ஜூலை 23 ஆம் தேதி 17,518 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன, கடந்த ஒரு நாளில் 1,28,489 மாதிரி சோதனைகள் நடத்தப்பட்டன. பாசிட்டிவ் ரேட் 13.63 சதவீதம் என்ற அளவுக்கு அங்கு அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக 132 இறப்புகள் பதிவாகியுள்ளன. அந்த மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,871 ஆக உள்ளது
தமிழ்நாடு நிலவரம்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,830 புதிய கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோர் ஒட்டுமொத்த எண்ணிக்கை 25,44,870 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24 பேர் கொரோனாவில் பலியாகினர். எனவே இறப்பு எண்ணிக்கை 33,862 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 24,816 செயலில் உள்ள கேஸ்கள் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,35,008 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, இது வரை ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 3,62,48,758 ஆக உள்ளது.