நல்லா இருக்கிறார்கள்.. தி்டீரென உடல்நிலை மோசமாகிறது.. கணிக்க கஷ்டம்.. கொரானா பலி பற்றி பீலா ராஜேஷ்
சென்னை: கொரோனா நோயாளிகளின் உடல்நிலை எப்போது எப்படி மாறும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
Recommended Video
நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார் பீலா ராஜேஷ். அப்போது, தமிழகத்தில் மதுரையை சேர்ந்த ஒரு நோயாளி உயிரிழந்தார். மற்ற அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர். ஐசியூ கூட அவர்களுக்கு தேவையில்லை. இவ்வாறு கூறினார்.
இந்த நிலையில், இன்று விழுப்புரம் மற்றும் தேனியில் தலா ஒருவர் என 2 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் சரமாரியாக பீலா ராஜேஷிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறிய பதில்களை பாருங்கள்:
தமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம்: இன்று 74 பேருக்கு பாதிப்பு, மொத்த எண்ணிக்கை 485ஆக உயர்வு.. 3 பேர் பலி
டெஸ்ட் செய்யுங்கள்
கண்டெண்ட்மெண்ட் மண்டலத்தில் இருக்கக்கூடியவர்கள் தங்களது ரத்தக்கொதிப்பு, சர்க்கரை அளவு உள்ளிட்டவற்றை அடிக்கடி பரிசோதித்து கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற பகுதிகளில் இருப்பவர்களும் இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு இதுபோல தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாறும் நிலவரம்
உலகத்திற்கே சவாலாக உள்ள ஒரு நோய் இது. நமது நாட்டைப் பொறுத்தளவில் இது ஒரு மருத்துவ பேரிடர் என்று சொல்லலாம். நோயாளிகளின் உடல்நிலை இப்போது எப்படி மாறும் என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. இப்போது மாவட்ட நிர்வாகங்களிடம் கேட்டாலும், ஐசியூ தேவையில்லை. நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், திடீரென நோயின் போக்கு மாறுகிறது. இதை பற்றி ஆய்வு செய்ய தேசிய தொற்றுநோயியல் இன்ஸ்ட்டிடியூட்டிடம் கேட்டுள்ளோம், என்றார்.
சரமாரி கேள்விகள்
நீங்கள் கூறக்கூடிய நோயாளிகள் எண்ணிக்கைக்கும், மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட நிர்வாகம் கொடுக்கக்கூடிய எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்கதையாக உள்ளது, என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த பீலா ராஜேஷ், வீட்டில் தனிமை படுத்துதல் என்பது அவ்வப்போது மாறக்கூடியது. மாவட்ட நிர்வாகங்கள் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ளவர்கள் எண்ணிக்கையையும் சேர்த்து சொல்லி இருக்கக்கூடும். அந்த எண்ணிக்கை சுகாதாரத்துறை பிறகுதான் அப்டேட் செய்யும்.
பிறருக்கும் பரவுகிறது
இதுவரை தமிழகத்தில் 422 நோயாளிகள் எண்ணிக்கையில், டெல்லியில் இருந்து திரும்பிவர்கள் மூலமாக பரவியது. நேரடியாக டெல்லி சென்றவர்கள் தவிர அவர்கள் பழகியவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தேனியில் உயிரிழந்த பெண்மணி இப்படி டெல்லி மாநாடு சென்று வந்தவர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்த ஆண்கள் மூலமாக பெண்மணிக்கு பரவியுள்ளது. இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு
டெல்லிக்கு சென்று வந்தவர்களிடம் மட்டுமே பரிசோதனை செய்யப்படுவதாகவும், மற்றவர்களிடம் இப்பொழுதெல்லாம் பரிசோதனை நடத்தப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஜனவரி 18ம் தேதி முதலே விமான நிலையங்களில் பரிசோதனையை தொடங்கிவிட்டோம். எந்தெந்த நாடுகளில் பாதிப்பு இருந்ததோ, அந்தந்த நாடுகளில் இருந்து வந்தவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டுதான் வந்ததும், 28 நாட்களை தாண்டி விட்டனர். தற்போது விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன என்பதால் அப்படி பரிசோதித்தவர்கள் மூலமாக நோய் பாதிப்பு ஏற்படுவது குறைந்து விட்டது. எனவே தான் உங்களுக்கு இந்த கேள்வி எழுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.