நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதால், சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு எதிரான பிடிவாரண்டு உத்தரவை திரும்பப் பெற்றது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தொலைதூர கல்வி மையங்கள் துவங்க பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து தனியார் நிதி நிலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, ஐகோர்ட்டில் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா நேரில் ஆஜராகவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதி அவரை கைது செய்து ஆஜர்படுத்த போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
இதையடுத்து, பிடிவாரண்ட் உத்தரவை நீதிபதி திரும்பப் பெற்றார். மேற்கொண்டு விசாரணைக்கு ஆஜராவதற்கு அப்போது மங்கத் ராம் சர்மா விலக்கு கேட்டதால் அதையும் நீதிபதி வழங்கினார்.
மேலும், தொலைதூர கல்வி மையங்கள் அனுமதி வழங்கியது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு கூட்டத்தில் எடுத்த முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.