மோடியின் ஊரடங்கு அழைப்புக்கு ஆதரவு.. நாளை மறுநாள், தமிழகத்தில் ஹோட்டல்கள், கடைகள் மூடப்படுகிறது
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் ஹோட்டல்கள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு வீடுகளுக்குள் இருக்கவேண்டும். இது மக்கள் ஊரடங்கு உத்தரவு என்று தெரிவித்தார்.
மிக மிக அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டும் தான் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு ஓட்டல் சங்கம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவுபடி ஞாயிற்றுக்கிழமை முழுக்க ஓட்டல்களை மூடி வைக்க முடிவு செய்துள்ளோம். இதனால் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் ஓட்டல்கள் இயங்காது. எங்கள் சங்கத்தின்கீழ், சென்னையில் மட்டும் சுமார் 40,000 ஹோட்டல்கள் இயங்குகின்றன. அவை அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல, தமிழகம் முழுக்க நாளை மறுநாள் கடைகள் அடைப்பு செய்யப்படும் என்று, வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் அதன் தலைவர் விக்கிரமராஜா இன்று அறிவித்தார். அதேபோல, சேலத்தில், இன்று முதல் 3 நாட்கள் தங்க, வெள்ளி, வைரம் கடைகள் மூடப்படும் என்று, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மோடியின் அறிவிப்புக்கு, ஆதரவாக பல்வேறு சங்கங்களும் அடுத்தடுத்து ஆதரவு அறிக்கைகளை வெளியிடும் என்று கூறப்படுகிறது.