தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி இருக்கு.. பீலா ராஜேஷ் சொன்னதை பாருங்க
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 102 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
நேற்று வரை 309 நோயாளிகள் இருந்த நிலையில், இன்று 102 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். ஆக மொத்தம் 411 நோயாளிகளுக்கு தமிழகத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
நோயாளி எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்திற்கு, தமிழகம் முன்னேறி உள்ள போதிலும், ஒரு நல்ல செய்தியும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
பேட்டி
பீலா ராஜேஷ் பேட்டியை பாருங்கள்: தமிழகத்தில் பாசிட்டிவ் கேஸ்களில் இதுவரை ஒரே ஒரு இறப்புதான் பதிவாகி உள்ளது. மற்றபடி நோயாளிகள் அனைவருமே நல்ல உடல் நிலையுடன் இருக்கிறார்கள். யாருக்குமே ஐசியூ சிகிச்சை கூட தேவையில்லை. எனவே இது பயப்படக்கூடிய ஒரு நோய் கிடையாது. நோய்த்தொற்று இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகி தக்க நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் பாதிப்பு கிடையாது.
28 நாட்கள்
28 நாட்கள் வெளித் தொடர்பு இன்றி தனிமைப்படுத்திக் கொள்வது இந்த நோய் தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு உதவும். தமிழகத்தில் 90 ஆயிரம் பேர் வீட்டு கண்காணிப்பில் இருக்கிறார்கள். தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை வைத்து ஒரு முடிவுக்கு வரவேண்டாம்.
சமூக பரவல் இல்லை
சமூக பரவல் என்ற நிலை ஏற்படவில்லை. வைரஸ் பாதிப்பு இரண்டாவது கட்டத்தில்தான் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு முறை சோதனை செய்து நெகட்டிவ் என்று வந்துவிட்டால் மறுபடி பாசிட்டிவ் என்று வராது என்று அர்த்தம் கிடையாது. மறுநாளே கூட பாசிட்டிவ் ஏற்படலாம். எனவேதான் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பதற்கு, மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தி வருகிறோம்.
பாதுகாப்பு
நெகட்டிவ் என்று டெஸ்ட் ரிசல்டு வந்து விட்டால் உங்களுக்கு இந்த நோய் வரவே வராது என்று அர்த்தம் கிடையாது. எனவே நாம் பாதுகாப்பாக இருப்பதுதான் இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்கான ஒரே வழியாகும். தமிழகத்தில் இந்த ஆய்வு என்பது ஜனவரி 18ம்தேதி முதலிலேயே தொடங்கிவிட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழகத்தில் சமூக பரவல் ஏற்படவில்லை என்பதும், நோயாளிகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்பதும், இந்த பேட்டியின் முக்கிய அம்சங்கள், மகிழ்ச்சியான செய்திகள்.