மோடி அலையில் தமிழகம் சிக்கவில்லை... கவிஞர் வைரமுத்து பேச்சு
சென்னை: நாடு முழுவதும் மோடியின் சுனாமி அலை பாய்ந்தாலும், அந்த அலையில் தமிழகம் சிக்கவில்லை என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக 300 க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களை தக்கவைத்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் நேரிலும், தொலைப்பேசியிலும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில், மு.க.ஸ்டாலினை சந்தித்த கவிஞர் வைரமுத்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க வெற்றி என்பது தமிழர்கள் தங்களை காத்துக்கொண்ட பாதுகாப்புக் கவசம். பெரும் வாக்கு வித்தியாசத்தில் கிடைத்த வெற்றி ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்றார்.
பொக்கே + பொக்கை வாயுடன் ஸ்டாலினை மு.க.வாழ்த்திய டிராபிக் ராமசாமி...!
மேலும், பாஜக திகைப்புக்குரிய வெற்றி பெற்றுள்ளது என்றும், திமுக வியப்புக்குரிய வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறிய வைரமுத்து, திமுகவின் வெற்றி திராவிட இயக்க கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த கவிஞர் வைரமுத்து, இந்தியத் திருநாடே! நல்லவர்கள் வெல்லட்டும் அல்லது வெல்கிறவர்கள் நல்லவர்களாகத் திகழட்டும். அறத்தின் தீர்ப்புக்குத் தலைவணங்குவோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.