ஜனவரி 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்... ஆளுநர் உரையுடன் முதல் கூட்டம் தொடங்குகிறது
சென்னை: வரும் ஜனவரி 6-ம் தேதி தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இந்திய அரசமைப்புச் சட்டம் 176(1) ந் கீழ் கூட்டத்தொடரின் முதல் நாளன்று ஆளுநர் உரை நிகழ்த்தவுள்ளார்.
இதற்கான அறிவிப்பை தமிழக சட்டமன்றச் செயலாளர் சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ளார்.
முதல் கூட்டம்
தமிழக சட்டமன்றம் வரும் 2020 ஜனவரி 6-ம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வ முறையில் வெளியிட்டுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 174-ன் படி தமிழக சட்டமன்றம் வரும் ஜனவரி 6-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரை
2020-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் முதல் நாளன்று உரை நிகழ்த்துகிறார். அதன் பின்பு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள் மீதான விவாதம் நடைபெறும்.
எத்தனை நாட்கள்
ஜனவரி 6-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டம் அதற்கு பிறகு எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து ஆளுநர் உரைக்கு பின்பு முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பின்னர் முதல்வர் அது தொடர்பாக பதில் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரவு
இந்திய அரசியலமைப்பு பிரிவு 174-ன் படி தமிழக சட்டப்பேரவையை கூட்டுவதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பிறப்பித்துள்ளார். இந்தக் கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக திமுக புயலை கிளப்பும் எனத் தெரிகிறது.