கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்திய முதல்வர்.. லாக்டவுன் கடுமையாகிறதா, தளர்வா?
சென்னை: உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவாமல் தடுப்பது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் தொடங்கியிருக்கிறது.
பிரிட்டனிலிருந்து தமிழகத்திற்கு வந்த 13 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 12 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து புதிய வகை கொரோனா தமிழகத்தில் மேலும் பரவாமல் தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காணொலி காட்சி மூலம் பங்கேற்று ஆலோசனை செய்தார். ஒவ்வொரு மாதமும் அந்த மாத இறுதியில் கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவது வழக்கம்.
மாவட்ட கலெக்டர்கள்
அப்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும். இம்முறை உருமாறிய கொரோனா விவகாரத்தால், முதல்வர் என்ன மாதிரி முடிவு எடுக்கப்போகிறார் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது. உருமாறிய கொரோனா பரவாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
தளர்வா, கட்டுப்பாடா
மார்ச் மாதம் முதல்வர் பிற மாநிலங்கள் போல தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால் சமீப காலமாக முதல்வர் ஒவ்வொரு மாத இறுதியிலும் ஆலோசனை நடத்தி இந்த ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கிறார். எனவே இக்கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை தளர்வா, அல்லது அதிக கட்டுப்பாடா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மருத்துவ நிபுணர்கள்
கலெக்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு மருத்துவ நிருபணர்களுடன் முதல்வர் ஆலோசித்தார். இரு தரப்பின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ள நிலையில், இன்று மாலை அல்லது, நாளை புதிய ஊரடங்கு குறித்து அறிவிப்பை அரசு வெளியிட உள்ளது.
இரவு நேர ஊரடங்கு
தமிழகத்தில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால், தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவு என்ன என்பது பற்றி, அறிவிப்பு வெளியாகும்போதுதான் தெரிய வரும்.