காலை முதல் தேநீர் கடைகள் திறப்பு.. பூங்காக்களில் மக்கள் உற்சாக வாக்.. இயல்பு நிலை நோக்கி தமிழகம்
சென்னை:சென்னை உட்பட தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று காலை முதல் ஊரடங்கு உத்தரவில், கூடுதல் தரவுகள் அமலுக்கு வந்துள்ளதால் தேநீர் கடைகள் திறக்கப்பட்டுள்ளன , பூங்காக்களில் மக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் , நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரளவு தளர்வுகளும், சென்னை உள்ளிட்ட பிற 27 மாவட்டங்களில் இன்னும் சற்று அதிகமான தளர்வுகளும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
வரும் 21ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு காலத்தில் இந்த புதிய விதிமுறை அமலில் இருக்கும். 21ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு அல்லது எவ்வாறு கட்டுப்பாடுகள் விதிப்பது என்பது பற்றி அப்போது அறிவிக்கப்படும்.
இன்று முதல்.. தமிழ்நாடு முழுக்க புதிய ஊரடங்கு தளர்வுகள்.. கவனிக்க வேண்டிய 6 முக்கியமான விஷயங்கள்
திறக்கப்பட்ட சாயா கடைகள்
11 மாவட்டங்களில் தேநீர் கடை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேநேரம் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் தேநீர் கடைகளை திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் இன்று காலை 6 மணிக்கு தேனீர் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் தொடங்கி உள்ளதை பார்க்க முடிகிறது. தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் வழங்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளதால், மக்கள் பார்சல் வாங்கிச் செல்கிறார்கள்.
பூங்காக்களில் மக்கள்
அதேபோல காலை 6 மணி முதல் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.. இதையடுத்து பூங்காக்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் நடைபயிற்சி மேற்கொண்டதை பார்க்க முடிந்தது. இருப்பினும் பழைய அளவுக்கு கூட்டம் வரவில்லை. நோய் பரவல் பயத்தால் வழக்கத்தைவிட பாதிக்கும் குறைவான அளவு மக்கள்தான் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
சலூன் கடைகள்
சலூன் கடைகள் அழகு நிலையங்கள் போன்றவற்றையும் திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவை காலை 9 மணிக்கு மேல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சிறிது சிறிதாக சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளன.
இ-பதிவு
11 மாவட்டங்களை பொறுத்தளவில், வேலைக்கு செல்வோர் வாகனங்களுக்கு இ-பதிவு பெற்று பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு பராமரிப்பு சேவைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
11 மாவட்டங்கள்
மின் பணியாளர்கள், கணினி உள்ளிட்ட இயந்திரங்களைப் பழுது நீக்குவோர், வீடுகளுக்குச் சென்று சேவையாற்ற காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. வேளாண் உபகரணங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படலாம். கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.