தமிழகத்தில் ஏகப்பட்ட தளர்வு அறிவித்த முதல்வர்.. லாக்டவுனை நீடித்தது ஏன்? மக்களுக்கு வைத்த கோரிக்கை
சென்னை: தமிழக அரசு செப்.30 வரை மிகப்பெரிய தளர்வுகளுடன் ஊடரங்கை நீடித்துள்ள போதிலும் சில முக்கியமான விஷயங்களை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது,
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
செப்.1 முதல் பேருந்துகள் இயக்கம்- வழிபாட்டு தலங்கள் திறப்பு... இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்
அடிக்கடி கைழுவுதல்
பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
நோய் தொற்று
தமிழக அரசு அமல்படுத்தி வரும் கட்டுப்பாடுகள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர பரிசோதனைகள் மூலம் நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமான அளவில் உள்ள நிலையில் மக்களைக் காக்க தற்போதுள்ள லாக்டவுன் நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது.
மேலும் தளர்வு உண்டு
இதனால் நோய்ப்பரவலை மேலும் பரவுவதை கட்டுப்படுத்த இயலும். எனவே, பொதுமக்கள் அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன்.நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது தேவைக்கேற்ப மேலும் தளர்வுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
5 பேர் கூடக்கூடாது
மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்" என்று கூறியுள்ளார்.