புதிய வேளாண் மசோதா எதிர்ப்பு... வட இந்திய பாணியை கையில் எடுத்த தமிழக மகிளா காங்கிரஸ்..!
சென்னை: புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட இந்திய பாணியில் தலையில் கறுப்பு ரிப்பன் கட்டி தமிழக மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர்.
புதிய விவசாய மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கீழம்பி என்ற கிராமத்தில் வயல்வெளிக்கு மத்தியில் ஸ்டாலின் போராட்டம் நடத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.
விவசாய மசோதாக்களை ஏன் எதிர்க்கவேண்டும்.. நச்சென 3 பாயிண்ட் சொல்லி ட்வீட் போட்ட திருமாவளவன்!
இந்நிலையில் மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஹசீனா சையத் உள்ளிட்ட பெண் நிர்வாகிகள் வட இந்திய பாணியில் தலையில் கறுப்பு ரிப்பன் கட்டி புதிய விவசாய மசோதாக்களை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினர். பொதுவாக தமிழகத்தில் கறுப்புக் கொடி தாங்கி போராட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் தலையில் கறுப்பு ரிப்பன் கட்டுவது என்பது வட இந்திய போராட்ட ஸ்டைல். அந்தவகையில் கறுப்பு ரிப்பனுடன் வயல்வெளியில் போராட்டம் நடத்தி கட்சித் தலைமையின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது சொந்த ஊரில் உள்ள தோட்டத்தில் போராட்டத்தை முன்னின்று நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். ஆனால் அதற்குள் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி என தகவல் வெளியானதால் சொந்த ஊருக்கு செல்லும் நிகழ்ச்சியை மாற்றியமைத்து சென்னை கொருக்குப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற வேளாண் மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கான செலவை பெரும்பாலும் திமுக மாவட்ட நிர்வாகிகளே செய்தது குறிப்பிடத்தக்கது.