தமிழகத்திற்கு கூடுதலாக 350 இடங்கள்.. எம்பிபிஎஸ் பிடிஎஸ் கலந்தாய்வை தொடங்கி வைத்து அமைச்சர் பேச்சு
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வினை தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ கல்வி சேர்க்கையில் இந்த ஆண்டு தமிழகத்திற்கு கூடுதலாக 350 இடங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டில் 3,968 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோன்று பல் மருத்துவத்துக்கான பிடிஎஸ் படிப்புகளுக்கு 1,070 இடங்கள் உள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டாக தனியார் கல்லூரிகளில் மொத்தம் 852 எம்பிபிஎஸ் இடங்களும், 690 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. அந்த இடங்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க இணையதளத்தில் கடந்த ஜூன் 7ம் தேதி முதல் 20 ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அவற்றை பரிசீலனை செய்து தர வரிசைப் பட்டியல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 11,741 மாணவர்கள், 19,612 மாணவிகள் என மொத்தம் 31,353 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். அதேபோன்று, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 9,366 மாணவர்கள், 16,285 மாணவிகள் என மொத்தம் 25,651 பேர் தகுதி பெற்றுள்ளனர். நேற்று. சிறப்பு பிரிவுக்கான முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவுக்கான கலந்தாய்வு நடந்தது.
அந்த பிரிவுகளைச் சேர்ந்த 123 பேருக்கு கலந்தாய்வில் பங்கேற்குமாறு அனுமதிக் கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பேரில் .முதல் நாள் கலந்தாய்வு முடிவில் 46 எம்பிபிஎஸ் இடங்களும், 2 பிடிஎஸ் இடங்களும் நிரம்பின. சிறப்புப் பிரிவில் மீதமுள்ள இடங்கள் அனைத்தும் பொதுப் பிரிவில் சேர்க்கப்பட உள்ளன.
இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு: காலை 9 மணிக்கு தொடங்கியது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர், இந்த ஆண்டு மருத்துவ கல்வி சேர்க்கையில் இந்த ஆண்டு கூடுதலாக 350 இடங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே கலந்தாய்வில் பங்கேற்க 103 மாணவர்களுக்கு (நீட் மதிப்பெண் 685 முதல் 610 வரை) அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்கள் ஓமந்தூரர் பல்நோக்கு மருத்துவனைக்கு வந்து கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.