தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.. வரதராஜன் வெளியிட்ட புது வீடியோ
சென்னை: தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் என்று, நடிகரும், செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை அவர் ஒரு வீடியோ வெளியிட்டு தனது நண்பருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், ஆனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், இது வதந்தி என கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், வரதராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில், வரதராஜன், பிற்பகல் மற்றொரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் என்ன கூறியுள்ளார் பாருங்கள்:
வரதராஜன் மாஸ்க் போட்டுகிட்டு வரத் தயாரா.. தமிழகத்தில் போதிய படுக்கை வசதி உள்ளது: விஜயபாஸ்கர் பேட்டி
உடல்நிலை முன்னேற்றம்
காலையில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தேன். எனது நண்பர் ஒருவருக்கு திடீரென உடல்நிலை முடியவில்லை. எந்த மருத்துவமனைக்கு போனாலும் அங்கெல்லாம் கூட்டம் நிறைந்து இருக்கிறது. அவர்களும் என்ன செய்வார்கள். சிகிச்சை கொடுப்பதற்குதான் அவர்களும் இருக்கிறார்கள். இருப்பினும் ஒரு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை ஆரம்பித்துவிட்டது. அவர் உடல்நிலை தற்போது நன்கு முன்னேறி உள்ளது. நல்லபடியாக அவர் வீட்டுக்கு திரும்பி வந்துவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
நான் தனிப்பட்ட முறையில் அனுப்பியிருந்தேன்
நான் எனது நாடக குழு நண்பர்கள் 25 பேருக்கு தனிப்பட்ட முறையில் வெளியிட்ட வீடியோ செய்தியை யாரோ ஃபார்வர்ட் செய்து உலகம் முழுக்க வைரலாகி எங்கெங்கிருந்தோ என்னை தொடர்பு கொள்கிறார்கள். நமக்கு தேவை இருந்தாலே தவிர, வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள். குடும்பத்தோடு இருங்கள். ரொம்ப அவசியம் என்றால் முக கவசம் அணிந்து செல்லுங்கள். சானிடைசர் பயன்படுத்துங்கள் என்று அரசு கூறியுள்ளது. பின்பற்றுங்கள். வெளியில் சென்றுவிட்டு வந்து ஒரு குளியல் போட்டால் கூட நல்லதுதான்.
அமைச்சர் ஓயாத உழைப்பு
மத்திய அரசும், மாநில அரசும் இந்த பிரச்சனையை கட்டுப்படுத்துவதற்கு முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள், அமைச்சர்கள் தினமும் எத்தனையோ மீட்டிங், முடிவுகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர் உட்பட எல்லோரும் முழு வீச்சில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்களை அவர்கள் தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டியது நமது கடமை. நாம் பெரிய சவாலை சந்தித்து வெளியே வந்து கொண்டிருக்கிறோம். நமது ஒத்துழைப்பு அரசுக்கு நிச்சயமாக தேவை. உலகமே இதிலிருந்து சீக்கிரம் வெளியே வர வேண்டும். இதற்காக வீட்டில், கூட்டுப் பிரார்த்தனை தினமும் செய்ய வேண்டும்.
செயலி
என்னுடைய வீடியோ பதிவை பார்த்து விட்டு, நண்பர் ஒருவர், செயலி குறித்த தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் சென்னை நகரம் மட்டுமல்லாது, மற்ற மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில், எவ்வளவு படுக்கைகள் காலியாக இருக்கிறது. ஒரு அவசரம் என்றால் எங்கு அழைத்துச் செல்லலாம். எத்தனை வென்டிலேட்டர்கள் ஃப்ரீயாக இருக்கிறது என்பது பற்றி தகவல் பகிர்ந்திருந்தார். அந்த உண்மைத் தன்மையை, நீங்கள் சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு வரதராஜன் தெரிவித்துள்ளார்.