தமிழக பொதுத்துறை வங்கிகளில் தமிழக அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
ஜெயம்கொண்டம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் விஷால் நாராயண் காம்ப்ளே திருச்சியில் உள்ள அதன் பிராந்திய அலுவலகத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தி மொழி தெரிந்த ஊருக்கு இடமாற்றம
சென்னை: இந்தி தெரியுமா என்று கேட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரியை இந்தி பூமிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிக்கிளைகளிலும் தமிழ் தெரிந்த தமிழ்நாட்டு அதிகாரிகள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் மகாராஷ்டிராவை சேர்ந்த விஷால் நாராயண் காம்ளே என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். அந்த வங்கியில் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 72 வயதான பாலசுப்பிரமணியன் கணக்கு வைத்து உள்ளார். இவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
பாலசுப்பிரமணியன் தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு, கடன் பெறுவதற்காக அந்த வங்கிக்கு சென்றார். அங்கு அவர் கிளை மேலாளர் விஷால் நாராயண் காம்ளேவை சந்தித்து, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காட்டி கடன் வழங்குமாறு கேட்டுள்ளார்.
அப்போது கிளை மேலாளர் இந்தியில் பேசியதோடு, பாலசுப்பிரமணியனுக்கு இந்தி தெரியுமா? என்று ஆங்கிலத்தில் கேட்டதாக தெரிகிறது. அதற்கு பாலசுப்பிரமணியன் தனக்கு இந்தி தெரியாது என கூறி உள்ளார். உடனே வங்கி மேலாளர் தனக்கு தமிழ் தெரியாது என்று கூறி கடன் வழங்க மறுத்ததாக குற்றம் சாட்டிய பாலசுப்பிரமணியன், மான நஷ்டஈடு கேட்டு வங்கி கிளை மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
விஷால் நாராயண் காம்ப்ளேவின் செயலை கண்டித்து தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். வாடிக்கையாளரின் அதிகப்படியான வயதுக் காரணமாகத்தான் கொடுக்கப்பட்ட கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக வங்கி அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்கு உள்ளான விஷால் நாராயண் காம்ப்ளே திருச்சியில் உள்ள அதன் பிராந்திய அலுவலகத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டாக்டர் ராமதாஸ், இந்தி தெரியாததால் மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த ஜெயங்கொண்டம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் விஷால் நாராயண் காம்ப்ளே திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், போதுமான நடவடிக்கை அல்ல என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு மக்களிடம் மொழித்திமிர் காட்டிய காம்ப்ளே தமிழ்நாட்டிற்கு வெளியே இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ள ராமதாஸ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிக்கிளைகளிலும் தமிழ் தெரிந்த தமிழ்நாட்டு அதிகாரிகள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும்! என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வங்கி அதிகாரி மீது புகார் கூறிய பாலசுப்ரமணியன், வங்கி அதிகாரி தன்னை அலட்சியமாக நடத்தியதாக கூறியுள்ளார். படிக்காத விவசாயிகள் உள்ளிட்ட பலர் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். என்னை போன்று அவர்களை கிளை மேலாளர் அலட்சியப்படுத்தக்கூடாது என்பதே எனது நோக்கம். அவரை பணியிட மாற்றம் செய்ததில் எனக்கு உடன்பாடு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.