நிறுத்துங்கள் தேர்வு நடைமுறைகளை.. காவலர் தேர்வு மோசடி வழக்கில்.. அரசுக்கு ஹைகோர்ட் சரமாரி கேள்வி!
சென்னை: 2019 தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய தேர்வில் நடைமுறைகளை நிறுத்தி வைத்தும், மார்ச் 5க்குள் தமிழக அரசு, டிஜிபி, தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோர் பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்கள் என 8,888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டு எழுத்துத்தேர்வு, நேர்முக தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தி, பிப்ரவரி 2ஆம் தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், வேலூரில் மாவட்டத்தில் 1019 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 763 பேரும் தேர்வானதாகவும், இவர்கள் அனைவரும் ((( 'சிகரம்' ))) ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனவும், இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள் எனக் கூறி, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி அன்பரசன், செல்வம் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தமிழ்வழிக்கல்வி
அந்த மனுவில், தேர்வில் கலந்து கொண்டவர்கள் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை என்பதால், தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
அதிகாரிகள் துணை
சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகளை விட, சீருடைப் பணியாளர் தேர்வுகளில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாலும், மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
நீதிபதி வேதனை
இந்த மனு இன்று நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து பதிலளிக்க தமிழக அரசு தரப்பில் 4 வார கால அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது நீதிபதி ஒவ்வொரு தேர்விலும் இப்படி முறைகேடு நடப்பதாக தகவல் வெளி வருகிறது, அனைவரும் ஒரே மதிப்பெண்னை பெறுகின்றனர் என தெரிவித்ததுடன், தேர்வு அமைப்புகள் மீதான நம்பிக்கையே தகர்ந்துவிட்டதாக வேதனை தெரிவித்தார். தமிழ் மண்ணில் பிறந்ததை பெருமையாக கருதுகின்ற அதேவேளையில், இதுபோன்ற நேர்மையின்மையால் வேதனையடைவதாகவும் தெரிவித்தார்.
என்ன நியாயம்
ஒரே மையத்திலிருந்து ஆயிரக்கணக்கில் எப்படி தேர்வாக முடிகிறது என்றும் கேள்வி எழுப்பினர். மனுதாரர் சிபிஐ விசாரணை கோரினாலும், அரசு ஏதாவது சரியான விசாரணை முறையை கையாள வேண்டுமென நீதிபதி வலியுறுத்தினார். காஸ்மோபாலிடன் கிளப்பில் இருப்பவர்கள் தேர்வாணைய தேர்வுகளில் பங்கேற்பதில்லை, சாதாரண மக்கள் கஷ்டப்பட்டு படித்து தேர்வுகளை எதிர்கொள்கிறார்கள், அப்படிப்பட்டவர்களுக்கு என்ன மாதிரியான நியாயம் கிடைக்கிறது???? என கேள்வி எழுப்பினார்.
நோட்டீஸ்
டி.என்.பி.எஸ்.சி. தேர்விலும் ஒரே மையத்தில் இதே முறை முறைகேடு என்றால், காவல்துறை தேர்விலும் இப்படி என்றால் அவர்கள் காவல்துதையில் பணியில் சேர்ந்தால் என்னவாகும் எனவும் கேள்வி எழுப்பினார். அப்போது அரசு தரப்பில், பின்னர், வழக்கு குறித்து மார்ச் 5க்குள் வாரத்தில் தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, சீருடை ஆனியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.