பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ.க்கு உதவ தமிழ்நாடு போலீஸ் ரெடி.. விரைவில் சிறப்பு அதிகாரி நியமனம்!
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தும் சி.பி.ஐ.க்கு முழு உதவி வழங்க தயாராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை உறுதி அளித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சி அடைய செய்தது. கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட பலரை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்த கும்பல் மிரட்டி பணம் பறித்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
ஒரு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கும் வீடியோவும் வெளியாகி பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இந்த வழக்கில் முதற்கட்டமாக திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்காதலனுடன் கள்ளத்தனமாக செல்போனில் பேசிய ஷாலினி.. கண்டித்த பிரபு.. சேலத்தில் நடந்த ஷாக் சம்பவம்!
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்ததுக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தன. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்த நிலையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போது அதிமுக அரசுக்கு கடும் அழுத்தம் கொடுத்தார்.
திமுக கடும் எதிர்ப்பு
இது தவிர திமுக சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. எதிர்கட்சிகளின் கடும் நெருக்கடி காரணமாக முதலில் தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்னர் பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு என்கிற பைக் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
கடந்த அதிமுக அரசுக்கு பெரும் கரும்புள்ளியாக அமைந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ ஏற்கனவே கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அப்போது பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளராக இருந்த அருளானந்தம் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
சிபிஐ விளக்கம்
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''ஏற்கெனவே இந்த வழக்கில் கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால், சில விளக்கங்களை நீதிமன்றம் கேட்டு வருகிறது. சிபிஐ-யில் ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது' என்று கூறினார்.
தமிழ்நாடு போலீஸ் வாக்குறுதி
இதனை தொடர்ந்து தமிழ்நாடு போலீசார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ' இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விரைந்து முடிக்க தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தமிழ்நாடு காவல்துறை தயாராக இருக்கிறது. இது தொடர்பாக எஸ்.பி. அந்தஸ்திலான ஒரு அதிகாரியை நியமித்து உதவத் தயாராக இருக்கிறோம்' என்று கூறினார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அருளானந்தம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
மு.க.ஸ்டாலின் உத்தரவு
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி பாலியல் வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வாங்கி கொடுக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். தற்போது திமுக ஆட்சிக்கு வந்து விட்ட நிலையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு உறுதியாக இருக்கிறது. தற்போது சி.பி.ஐ விசாரணை நடந்து வரும் நிலையில், சி.பி.ஐ.க்கு அனைத்து வகையிலும் உதவி செய்ய தமிழ்நாடு போலீசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். சி.பி.ஐ.க்கு உதவுவதற்காக தமிழ்நாடு போலீசில் விரைவில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படும் என்று கூறப்படுகிறது.