டிக்கெட் எடுக்காமல் பஸ்சில் போகக் கூடாது.. போலீசாருக்கு சைலேந்திர பாபு போட்ட "ஸ்ட்ரிக்ட்" உத்தரவு
சென்னை: தனிப்பட்ட காரணங்களுக்காக பயணம் செய்யும்போது போலீசார் பேருந்துகளில் கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியிருக்கிறார்.
ஒருபக்கம் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக தீவிரமாக ஆலோசனைகளை நடத்தி அறிவுரைகளை வழங்குவது என்றால் இன்னொரு பக்கம் காவல்துறைக்கும் சீர்திருத்தங்களை செய்ய வேண்டியது முக்கியம் என்பதையும் அவர் உணர்ந்துள்ளார் என்று தெரிகிறது.
'உங்கள் தொகுதியில் சிஎம்'.. அடுத்த அதிரடியில் சைலேந்திரபாபு.. பறக்கும் மனுக்கள்.. டிஜிபி ஆக்சன்
வெளியே, உள்ளே
சமீபத்தில் மதுரையில் தென்மண்டல போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார் சைலேந்திரபாபு. அப்போது ரவுடிகளுக்கு எதிரான பழைய வழக்குகளை மீண்டும் கையில் எடுக்குமாறு உத்தரவிட்டார். இது சமூகத்தைச் சீர்திருத்துவதற்கான நடவடிக்கை என்றால், காவல் துறையில் நடக்கும் சில தவறுகளை மாற்றிக் கொள்வதற்காக பஸ் டிக்கெட் தொடர்பாக ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார் அவர்.
டிக்கெட் பயணம்
போலீசார் தங்கள் சொந்த தேவைக்கு பேருந்தில் செல்லும்போது கண்டிப்பாக டிக்கெட் எடுத்து தான் பயணம் செய்ய வேண்டும், விதிமுறைகளை மீறும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு சுற்றறிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பி வைத்துள்ளார்.
நடத்துனர் கொலை
டிக்கெட் எடுக்காமல் சென்ற காவல் துறையினருக்கும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக நடத்துனருக்கு மோதல் ஏற்பட்டு பஸ் நடத்துனர் உயிரிழந்த சம்பவத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி இருந்தது. அந்த விசாரணையின் போது தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் இலவசமாக போலீசார் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
திட்டவட்டம்
இதை தனது சுற்றறிக்கையில் டிஜிபி சைலேந்திரபாபு சுட்டிக்காட்டியிருக்கிறார். மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் அறிவுரையை கண்டிப்பாக அனைத்து போலீசாரும் பின்பற்ற வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் சைலேந்திரபாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிக்கடி தகராறு
இந்த ஒரு சம்பவம் என்று கிடையாது. அவ்வப்போது பேருந்துகளில் நடத்துனர்கள் மற்றும் போலீசார் இடையே இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்போது காவல்துறையினர் நடத்துனரை கடுமையான வார்த்தைகளால் திட்டுவது சில நேரங்களில் அடிப்பது போன்ற சம்பவங்கள் சக பயணிகள் செல்போன்களில் படம் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன. இந்த மோசமான கலாச்சாரம் முடிவுக்கு வர சைலேந்திர பாபு உத்தரவு பயன்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.