ஓமிக்ரானை எதிர்கொள்ள தயாராகும் தமிழகம் - சென்னையில் 275 படுக்கைகள் தயார்
ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மா.சுப்ரமணியம் கூறியுள்ளார்.
சென்னை: ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவில் இருவருக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் 275 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
Recommended Video
ஓமிக்ரான் வைரஸ் தொற்று தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி, அச்சுறுத்தி வருகிறது. இது அதி தீவிரமாக பரவக் கூடியது என்றும் வீரியம் மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். அதிக பரவல் தன்மையையும், 30க்கும் மேற்பட்ட திரிபுகளையும் கொண்ட ஓமிக்ரான், தற்போது வரை 30 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
ஓமிக்ரான் திரிபு கண்டறியப்பட்ட பின்னர் தென் ஆப்ரிக்காவில், தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 74 சதவிகிதம் பேருக்கு ஒமைக்ரான் திரிபு இருப்பதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தென் ஆப்ரிக்காவிற்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன.
பெங்களூருவில் 2 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓமிக்ரானை எதிர்கொள்ளத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முககவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்க பயணி எப்படி வந்தார்? பெங்களூரில் ஓமிக்ரான் கண்டறியப்பட்ட அந்த நொடி- நடந்தது என்ன?
ஓமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 150 படுக்கைள் ஒதுக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 4ஆவது தளத்தில் முதற்கட்டமாக 150 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 75 படுக்கைகளும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 15 ஐ.சி.யு படுக்கைகள், 35 பொது படுக்கைகளும் என மொத்தமாக 275 படுக்கைகள் ஓமிக்ரான் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.கிண்டி கொரோனா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் ஓமிக்ரான் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஓமிக்ரான் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில், தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறினார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை தவிர்க்கும் நோக்கில், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.