தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 5,975 பேருக்கு கொரோனா; 6,047 பேர் டிஸ்சார்ஜ்; 97 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 5,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 6,047 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா மற்றும் பிற நோய்களால் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. சுமார் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் 57 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா மற்றும் அதனால் ஏற்பட்ட பிற நோய்களால் உயிரிழந்தும் உள்ளனர்.
சென்னையில் 1298 பேருக்கு கொரோனா- கோவையில் 392, கடலூரில் 380 பேருக்கு பாதிப்பு!
இந்தியாவில் 7 லட்சம் பேர் சிகிச்சை
இந்தியாவில் தற்போது சுமார் 7 லட்சம் பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும் 2-வது இடத்தில் தமிழகமும் இருக்கிறது. ஆனால் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில்தான் இருக்கிறது.
5,975 பேருக்கு கொரோனா பாதிப்பு
இதனிடையே தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 68,111 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 5,975 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 3,79,385 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 40,63,624 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டும் இருக்கிறது.
6,047 பேர் டிஸ்சார்ஜ்
இன்னொருபுறம் தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா சிகிச்சை முடிந்து 6,047 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,19,327 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா மற்றும் அதன் தாக்கத்தால் ஏற்பட்ட பிற நோய்களால் 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 97. அரசு மருத்துவமனைகளில் 76 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 21 பேரும் உயிரிழந்தனர்.
கொரோனா மரணங்கள் 6,517
இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது 6,517 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 53,541 மட்டும்தான். மாவட்டங்களில் சென்னையில் 1298 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 352, கோவையில் 392, திண்டுக்கல்லில் 178, காஞ்சியில் 222, சேலத்தில் 261, திருவள்ளூரில் 354 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மாவட்டங்களில் சென்னையில்தான் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கடுத்ததாக தேனியில் 7 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.