பிரசிடெண்ட், கவுன்சிலர்கள் உட்பட.. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவிப் பிரமாணம்
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், இன்று காலை 10 மணிக்கு பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
Recommended Video
தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது.
ஒன்பது மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும், 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தமாக 27,003 தேர்தல் உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் வேறு மாவட்டங்களில் இடைத் தேர்தல் நடந்த மிகச் சில இடங்களும் அடங்கும்.
தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் முடிவு.. கட்சி நிர்வாகிகளிடம் சீறிய ராமதாஸ்.. கூட்டணி குறித்து புதிய முடிவு!
பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ தகுதி உடையவர்கள் எனவும் மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 1015 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை திமுக அணியும் 201 இடங்களை அதிமுக அணியும் பெற்றுள்ளன. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 138 இடங்களையும் அதிமுக அணி 2 இடங்களையும் பெற்றுள்ளன.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.