தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்.. ஆகஸ்ட் 14ஆம் தேதி தாக்கலாகிறது
சென்னை: தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு முதல்முறையாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், அந்த பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல்முறையாகத் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என இன்று அறிவிக்கப்பட்டது.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதே விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் வேளாண் துறைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்திருந்தார். விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாயச் சங்கங்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்து வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருகிறது.
வேளாண் துறைக்கான முதல் தனி பட்ஜெட் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் அதற்கு மறுநாள் அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிதித்துறைச் செயலாளர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் வேளாண் துறைக்குத் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
தமிழ்நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா மரணங்கள்.. இணை நோய் இல்லாத 6 பேர் உட்பட 39 பேர் பலி