தமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பு எப்போது? பல தளர்வுகள் வரப்போகிறது.. 28ல் முதல்வர் ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 28ம் தேதி மாவட்ட கலெக்டர்கள், சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி போடப்பட்ட ஊரடங்கு பல கட்டங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் முதல் இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட போது இருந்த கட்டுப்பாடுகள், அதன்பிறகு குறைந்து கொண்டே வந்தன.
தற்போது அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் மட்டுமே ஊரடங்கு அமலில் உள்ளது. மற்ற இடங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக, பாஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்.. பாஜக டெல்லி தலைமை தான் முடிவு செய்யும்.. முருகன் அதிரடி
பள்ளிகள் திறப்பில்லை
மிக முக்கியமாக கடைகள், பொது போக்குவரத்து, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மால்கள், கோயில்கள் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள், கல்லூரிகள் இன்று வரை திறக்கப்படவில்லை. மேலும் தமிழகத்தில் தியேட்டர்கள், நீச்சல் குளங்களும் திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்திய அரசு அன்லாக் 5.0 இல் பள்ளிகள் திறப்பு குறித்து மாநிலங்கள் அக்டோபர் 15ம் தேதிக்கு பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது. இதேபோல் தியேட்டர்களை திறக்கவும் அனுமதி அளித்துள்ளதுடன் வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இதுவரை இதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
அதிகரிக்கும் கோரிக்கை
தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருவதால், தியேட்டர்களை திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திரைத்துறையினர், தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சூழலில். ஒவ்வொரு மாதம் இறுதியிலும், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார். அதன் பின்னர் தளர்வுகளை அறிவிப்பார்.
நவம்பர் 1ம் தேதி தியேட்டர் திறப்பு
அதன்படி வருகிற 28ம் தேதி (புதன்) அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. அப்போது, நவம்பர் 1ம் தேதியில் இருந்து தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்க உள்ளதாகவும், அப்படி திறந்தால், 50 சதவீதம் மக்கள் அமரும் வகையில் மத்திய அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க உத்தரவிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நவம்பரில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் அப்போது நிறைய புது படங்கள் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
கேள்விக்குறியாகும் கல்வி
இதனிடையே ஏழு மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. தனியார் பள்ளிகள், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகின்றன.. அதேநேரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இந்த ஆன்லைன் கல்வி முறை முற்றிலும் ஒத்துவரவில்லை. ஸ்மார்ட்போன் இல்லாதது. போதிய வசதிகள் இல்லாதது போன்ற காரணங்கள் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் மார்ச், ஏப்ரல் மாத தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலையில், பள்ளி திறப்பு தாமதமாகி வருவதால் அவர்களுக்கு தேர்வு நேரத்தில் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பெரிய வகுப்புகள்
தற்போதைய நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் நவம்பர் மாதம் முதல் அரைநாள் மட்டும பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. எனவே தமிழக அரசும் நவம்பரில் பள்ளிகளை திறப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. குறைந்த பட்சம் பெரிய மாணவர்களுக்கு வகுப்புகள் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. சில மாதங்கள் சுழற்சி முறையிலேயே வகுப்புகள் நடத்த அனுமதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.