தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் ஆலோசனை நடத்தினார்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மார்ச் மாதம் 2வது வாரத்தில் இருந்து மூடப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் பள்ளிகள் கொரோனா காரணமாக திறக்கப்படாத நிலையில் , புதிய கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது. அத்துடன் வரும் 16ம் தேதி முதல் அனைத்துக் கல்லூரிகள், கல்வி நிலையங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்த விவகாரம்.. ஐ.ஐ.டி. குழு ஆய்வுக்கு வலியுறுத்தும் திமுக..!
பொங்கல் பண்டிகை
இதனிடையே, நவம்பர் 16 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், பள்ளிகள் திறப்பில் அவசரகோலமான அறிவிப்பு ஏன்? கொரோனா குறித்த ஆராய்ச்சிகள், எச்சரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டனவா?
பெற்றோர்- ஆசிரியர்- மருத்துவர்களுடன் ஆலோசனைகளை முதல்வர் செய்தாரா? என கேள்வி எழுப்பினார். அத்துடன் 2021-ல் பொங்கல் பண்டிகைக்கு பிறகு அப்போதைய சூழலை ஆய்ந்துதான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆலோசனை
இந்நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை வருகிற 16 ஆம் தேதி பள்ளிகள் திறப்புக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் ஆலோசனை நடத்தியுள்ளார். பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பள்ளிகள் திறப்பில் மாற்றம்
இதனிடையே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு தற்போது 2500 என்ற அளவில் பதிவாகி வருகிறது. பள்ளிகளை இப்போது மீண்டும் திறந்தால் மீண்டும் அதிகரிக்கும் அச்சமும் உள்ளது. எனவே தமிழக பள்ளிகள் திறப்பு முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாறுகிறதா தேதி?
டிசம்பர் மாதத்திற்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் என்று ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. முன்னதாக அக்டோபர் முதல் வாரத்தில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு அறிவிப்பை வெளியிட்டு பின்னர் அந்த முடிவை தமிழக அரசு திரும்பப் பெற்றது. அதேபோன்று இப்போதும் மாற வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.