பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பில் திருப்தியில்லை.. சென்னையில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
சென்னை: பாபர் மசூதி இடிப்பில் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாபர் மசூதி இடிப்பு குறித்த வழக்கை விசாரித்த, லக்னோ சிபிஐ சிறப்பு நீதி மன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது அதில் இடிப்பதற்காக சதி திட்டம் தீட்டியதாக போதிய ஆதாரம் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தீர்ப்பை கண்டித்து இன்று வியாழன் காலை 11 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென் சென்னை மாவட்ட தலைவர் ஹபீப் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தீர்ப்புக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். மாநில பொதுச் செயலாளர் இ.முஹம்மது கண்டன உரையாற்றினார்.
அவர் கூறுகையில், குற்றவாளிகள் பாபர் மசூதியை இடிப்பதற்கு முன் கூட்டியே திட்டமிடவில்லை, சதி செய்யவில்லை என்று குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாபர் மசூதி இட வழக்கில் எவ்வாறு தீர்ப்பு வழங்கப்படவில்லையோ, அதுபோன்ற அடிப்படையில்தான் இப்போதும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது. பாபர் மசூதி நிலத்திற்கு உரிமை கோரும் ஆவணங்கள் இஸ்லாமியர்களிடத்திலேயே நிறைந்திருந்தாலும், கூட்டு மனசாட்சி அடிப்படையில் அதை இடித்தவர்களுக்கே நிலம் சொந்தம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
பாபர் மசூதியை இடித்தவர்கள் யார்? என்று உலகத்திற்கே தெரிந்திருந்தும், மசூதி இடிப்பு குறித்து குற்றவாளிகள் பல்வேறு சுய வாக்குமூலங்கள் அளித்திருந்த போதிலும், பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் திட்டமிட்டு மசூதியை இடிக்கும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நிறைந்திருக்கும் நிலையிலும் கடந்த 28 ஆண்டுகளாக அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளத்தனமாக அந்நிய நாட்டிற்கு சென்றது அரசியல் சட்ட இடிப்பு இல்லையா மிஸ்டர் வைகோ? கேட்பது ஹெச். ராஜா
இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் எப்போதுமே நம்பிக்கையாகவே இருந்து வந்தார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் அப்துல் ரஹிம், மாநில துணை தலைவர் அப்துல் ரஹ்மான்,மாநில செயலாளர்கள் இப்ராஹிம்,அன்சாரி,பாருக், யாசிர் மாவட்ட நிர்வாகிகள் ,பயாஸ்,ஹயாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.