இலங்கை தாக்குதலில் தொடர்புள்ள அமைப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சென்னை: இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை, குறிவைத்து நடத்தப்பட்ட அடுத்தடுத்த தாக்குதல்களில், 321 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த குண்டுவெடிப்புக்கு, ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் மூளையாக ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் செயல்பட்டு உள்ளபோதிலும், இலங்கையைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் தமிழக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பெயரை குறிப்பிட்டு, இரு அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பது போன்ற செய்திகள் பரவி வருகின்றன.
இதுகுறித்து சென்னையில் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில துணை பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: இலங்கையைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பெயருக்கும், எங்கள் அமைப்பின் பெயருக்கும் தொடர்பு இருப்பதால் இந்த விளக்கத்தை நாங்கள் அளிக்க விரும்புகிறோம்.
குண்டு வைப்பவர்கள், கொலை செய்பவர்கள் வெளிப்படையாக செயல்பட மாட்டார்கள். அந்த வகையில்தான் இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தொடர்பான பெயரும் இந்த தாக்குதலுக்கு பிறகு தான் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. எங்களுக்கும் அப்படித்தான் தெரியும். ஆனால், தமிழக தவ்ஹீத் ஜமாஅத் பெயரை தொடர்புபடுத்தி தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.