நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம் - சனிக்கிழமையும் மனு அளிக்கலாம்
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை மறுநாள் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 29ஆம் தேதி சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் எனவும். ஜனவரி 28ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சாதாரணத் தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 26.1.2022 அன்று அறிவித்துள்ளது. அதன்படி வேட்புமனுக்கள் 28.1.2022 அன்று காலை 10.00 மணி முதல் தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தாக்கல் செய்யலாம்.
பத்மராஜன் மாதிரி.. உ.பி.யிலும் ஒரு தேர்தல் மன்னன்! 94வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த ஹஸ்னுராம்!
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்/உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 29.1.2022 சனிக்கிழமை பணி நாள் என்பதால், அன்றைய தினமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் 19.1.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில், கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை ஏற்று வாக்குப்பதிவு நேரத்தினை காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நிர்ணயம் செய்து ஆணை வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிடவும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவினை நடத்திடவும் கூடுதல் நேரம் தேவைப்படுவதால் மேற்படி ஆணை வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 தொற்று உள்ளவர்கள் மட்டும் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குப்பதிவு நாளன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.