முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி.. அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு வாழ்க கோலம்!
சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகமும் தமிழ்நாடு கோலமும் இடம் பெற்றிருந்தது.
சென்னை: நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆளுநர் ஆர்.என். ரவி கொடியேற்றி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் சிறப்பு பதங்கங்களை வழங்கினார். ஆளுநரும், முதல்வரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்க கலை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு நடைபெற்ற அலங்கார வாகன ஊர்தியில் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகமும், தமிழ்நாடு கோலமும் இடம்பெற்றிருந்தது.
நாட்டின் 74 ஆவது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியரசு தின விழாவிற்கு வருகை புரிந்த ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து முப்படை வீரர்கள், காவல்துறை சிறப்பு படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெற்றது. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அலங்கார ஊர்தி வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
காவல்துறையினரின் அணிவகுப்பு ஊர்தி வரும் போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற போது கூறிய வாசகம் ஒலித்தது. காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகளை முதல்வர் ஸ்டாலின் பேசியது வீடியோவாக ஒளிபரப்பானது.
ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையினர் அலங்கார ஊர்தி அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மலைவாழ் மக்களின் வீடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகம் முதன்மையாக இருந்தது. தமிழ்நாடு என்ற கோலமும் வரையப்பட்டிருந்தது. அப்போது ஒரே மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் முதல்வர் ஸ்டாலினும் அமர்ந்திருந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆளுநர் பேசிய தமிழகம் என்ற வார்த்தை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு என்ற வார்த்தையை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக்கினர். சட்டசபையில் ஆளுநர் ரவி தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிக்காமல் சென்றதும் சர்ச்சையை உருவாக்கியது.
இதனையடுத்து வீடுகள் தோறும் தமிழ்நாடு வாழ்க என்ற கோலம் வரைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். தை முதல் நாளை தமிழ்நாடு வாழ்க என கோலமிட்டு வரவேற்போம் என மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு மீதான தங்கள் பற்றை உணர்த்தினர்.
சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழகம் தமிழ்நாடு என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஆளுநர் தமிழ்நாடு அரசு இடையேயான போர் ஓய்ந்த நிலையில் இன்றைய தினம் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகம் முதன்மையாக இருந்தது. தமிழ்நாடு என்ற கோலமும் வரையப்பட்டிருந்தது.