கேன்-வாட்டர் இல்லை.. லட்சக்கணக்கானோர் பாதிப்பு.. சென்னையை ஸ்தம்பிக்க செய்த லாரி வேலை நிறுத்தம்!
தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
Recommended Video
சென்னை: தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நேற்று முதல்நாள் இந்த வேலை நிறுத்தம் தொடங்கியது.
முக்கியமாக சென்னை, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் பகுதி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இதன் காரணமாக நேற்று காலையில் இருந்து தண்ணீர் லாரிகள் இயங்கவில்லை.
[தமிழக கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற ஸ்ட்ரைக்.. சென்னை மக்கள் அவஸ்தை ]
என்ன ஆனது
தண்ணீர் தற்போது கனிமவளம் என்ற பிரிவின் கீழ் வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் எடுக்க சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். ஆனால் இவ்வளவு நாட்கள் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது தமிழகம் முழுக்க நிலத்தடி நீரை வணிக ரீதியாக பயன்படுத்த சென்னை ஹைகோர்ட் தடை விதித்து இருக்கிறது.
போராட்டம் அறிவிப்பு
தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவே இந்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை நம்பித்தான் இந்த நிறுவனங்கள் இருக்கிறது என்பதால், இந்த நிறுவனங்கள் எல்லாம் கூட்டம் வேலை நிறுத்தத்தில் குதித்தது.
நிறுத்தப்பட்டது
இந்த நிலையில் நேற்று மாலை தமிழகம் முழுவதும் கேன் - வாட்டர் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. தண்ணீர் லாரி வேலை நிறுத்தத்தை தொடர்ந்து கேன் வாட்டர் உற்பத்தி நிறுத்தபட்டது. தண்ணீர் விநியோகமும் நேற்று மாலையே நிறுத்தப்பட்டது.
எங்கிருந்து
பொதுவாக இந்த லாரி தண்ணீர்கள் எல்லாம் டேங்குகளில் மாற்றப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. சிறுசேரி, தாழம்பூர், ஆலத்தூர், பையனூர், தண்டலம், பொன்மார், பனங்காட்டுப்பாக்கம், நாவலூர், இள்ளலூர், திருப்போரூர், வெண்பேடு, காயார் ஆகிய பகுதிகளில் உள்ள கிணறுகள் மற்றும் ஏரிகளில் உள்ள தண்ணீர் சுத்தம் செய்யப்பட்டு அந்த நீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு
சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகள், வீடுகள், நிறுவனங்கள் இந்த கேன் தண்ணீரை நம்பித்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட சென்னையில் 95 சதவிகித மக்கள் இந்த கேன் தண்ணீரை நம்பித்தான் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் இந்த வேலை நிறுத்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் ''பிஜி''யில் வசிக்கும் இளைஞர்கள், கல்லூரிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள்
அதேபோல் சென்னையில் உள்ள 1000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 200க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் எல்லோரும் கேன் தண்ணீரை நம்பித்தான் இருக்கிறார்கள். இதனால் 1 கோடி பேர் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.