தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. காலை 11.30 to 3.30 வரை மக்கள் வெளியே செல்ல கூடாது
சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், மொத்தம் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் இந்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கை:
கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை , புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
செவ்வாய் கிழமையில் மவுன விரதம் இருங்க யாகம் செய்த பலன் கிடைக்கும்
கன மழை
அதே நேரம் ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருக்கிறது. ஆக மொத்தம் 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனல் காற்று
அதேநேரம், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அனல் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெளியே போக கூடாது
அனல் காற்று காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு, பொதுமக்கள், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை நிலவரம்
மீனவர்களுக்கான எச்சரிக்கை, ஏதுமில்லை. சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருக்கும்.