அடுத்த 2 நாட்களுக்கு.. எங்கெல்லாம் மழை வெளுக்கப் போகிறது.. சென்னை வானிலை மையம் சொல்வதை பாருங்க
சென்னை: டெல்டா மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் அடுத்த இரு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில், 12 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மழை பதிவு
திருத்தணி, தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதிகளில் தலா 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர், விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சீர்காழி, காரைக்கால் பகுதிகளில் தலா 4 சென்டிமீட்டர், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதிகளில் தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வட தமிழகத்தை பொறுத்த அளவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கேரளாவை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
வறண்ட வானிலை
பிப்ரவரி 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலம் தவறி பெய்த மழை
புதுக்கோட்டையில் 2 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. கடந்த ஜனவரியில் பருவம் தவறி பெய்த மழையால் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேலான சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின. எஞ்சிய பயிர்களை வைத்து வாங்கிய கடனை எப்படி திருப்பிச் செலுத்துவது என விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். மத்திய குழு ஆய்வு செய்த பிறகும் இழப்பீடு தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
விவசாய பணிகள்
சம்பா சாகுபடி கைவிட்டாலும், கோடை சாகுபடி நிச்சயம் கைகொடுக்கும் என நம்பிக்கையில் புதுக்கோட்டை விவசாயிகள் விவசாய பணிகளை துவங்கியுள்ளனர். அதே நேரம், அரசு, விவசாய இடுபொருள், பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைப்பதை உரிய நேரத்தில் உறுதி செய்தால் விவசாயிகளின் நம்பிக்கை பொய்த்துப் போகாது.