வானிலை மட்டுமல்ல.. 'இதிலும்' காலடி எடுத்து வச்சி கலக்கும் தமிழ்நாடு வெதர்மேன்.. சொல்லியடிக்குறாரே!
சென்னை: மார்கழி பனி உச்சியில் விழுகிறது.. மழைக்கான வாய்ப்பு, மருந்துக்கு கூட இல்லை.. வேறு என்ன செய்வார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்? அதனால்தான் புதிய 'களத்தில்' கலக்க ஆரம்பித்துள்ளார் மனிதர்.
வெயில் காலமோ, மழைக் காலமோ, அல்லது அதைவிட முக்கியமாக புயல் காலமோ.. தமிழக மக்களுக்கு முதலில் நினைவு வருவது சென்னை வானிலை ஆய்வு மையம் மட்டும் கிடையாது. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும்தான்.
புள்ளி விவரங்களை ஃபிங்கர் டிப்சில் வைத்துக் கொண்டு, பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் அள்ளிவிடுவார். இதற்காகவே பெரிய ஃபாலோவர் கூட்டமே உருவாகிவிட்டது.
தமிழ்நாடு வெதர்மேன்
அது, பகலோ, இரவோ, அதிகாலையோ.. புயல், மழை போன்ற காலகட்டங்களில் 24 மணி நேர சேவையாற்றுபவர் பிரதீப் ஜான். பெரும்பாலும் இவர் கணிப்பு மிகச் சரியாக துல்லியமாக இருக்கும். தமிழகத்தின் தலை சிறந்த தனியார் வானிலை ஆய்வாளர்களில் ஒருவர் பிரதீப் ஜான். ரமணனுக்கு பிறகு, மாணவர்களிடமும் படு ஃபேமஸ் பிரதீப் ஜான்.
கமெண்டரி
இப்படிப்பட்ட பிரதீப் இப்போது கிரிக்கெட் வர்ணனையாளர் போல அவதாரம் எடுத்து, அதிலும் அசத்தி வருகிறார். இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி, இன்று துவங்கியுள்ளது. இதை சமூக வலைத்தள பக்கங்களில், கிட்டத்தட்ட ரன்னிங் கமெண்டரி அடித்து வருகிறார் பிரதீப்.
கிரிக்கெட் பக்கம்
அனேகமாக அவர் வானிலை பற்றி பதிவு போட்டது டிசம்பர் 20ம் தேதிதான். அதன்பிறகு வானிலை வறண்டு கிடப்பதால், வானம் மேகமில்லாமல் பனி பெய்து வருவதால், வெதர்மேனும், வெதரைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. பாக்சிங் டே டெஸ்ட் அல்ல. முதல் டெஸ்டிலிருந்தே பிரதீப் கிரிக்கெட் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.
பரிந்துரை செய்த வெதர்மேன்
வெதர் போலவே, கிரிக்கெட்டிலும் இவர் கணிப்பு அப்படியே பொருந்திப்போவதுதான் ஆச்சரியம். டிசம்பர் 19ம் தேதி பிரதீப் ஜான் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இந்தியா 36 ரன்களில் ஆல்-அவுட்டாகியுள்ளது. எனவே அடுத்த போட்டியில் பேட்டிங்கை வலிமைப்படுத்த வேண்டும். பிரிதிவ் ஷாவுக்கு பதில் சுபம் கில், கோலி லீவில் போவதால், ராகுல் அல்லது ரோகித் உள்ளே, விகாரிக்கு பதில் ஜடேஜா, விருதிமான் சாஹாவுக்கு பதில், ரிஷப் பந்த் ஆகியோரை களமிறக்க வேண்டியது அவசியம் என கூறினார் பிரதீப்.
கிரிக்கெட்டிலும் சூப்பர் கணிப்பு
என்ன ஆச்சரியம்.. இன்று ஏறத்தாழ அப்படித்தான் அணி களமிறங்கியுள்ளது. 4 பரிந்துரைகளில் 3 பலித்துவிட்டது. இதையும் பிரதீப் ஜான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விகாரி வெளியேறவில்லை. ஆனால் ஜடேஜா உள்ளே வந்துள்ளார். மற்றபடி, சுபம் கில், ஜடேஜா, ரிஷப் பந்த் என, பிரதீப் பரிந்துரைத்தவர்கள்தான் டீமில் உள்ளனர்.
அப்படியே, அந்த வடகிழக்கு பருவமழை
வானிலை மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் சரியா கணிச்சுட்டீங்க பாஸ் என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள். சிராஜ் அருமையாக பந்து வீசுகிறார். முதல் ஸ்பெல்லைவிட அடுத்த ஸ்பெல்லில் சூப்பராக வீசி சிறந்த டெஸ்ட் பவுலர் என்ற அந்தஸ்துக்கு உயரும் அறிகுறியை காட்டுகிறார் என்றெல்லாம் தேர்ந்த கிரிக்கெட் வர்ணனையாளர் போல வர்ணிக்கிறார் பிரதீப் ஜான். "சார் அப்படியே அந்த வட கிழக்கு பருவமழைக்கு என்னாச்சுன்னு கண்டுபிடிச்சி தாங்களேன்" என்ற நெட்டிசன்களின் அன்பு கோரிக்கைக்கு இடையே, அசராமல் ஆஸ்திரேலிய தொடரை அசத்தலாக வர்ணித்து வருகிறார் தமிழ்நாடு வெதர்மேன்.