வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை - புவியரசன் சொன்ன நல்ல செய்தி
வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றைய தினம் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் டிசம்பர் 4ஆம் தேதியன்று புயலாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார். இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனவும் புவியரசன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. வட மாவட்டங்கள் மட்டுமல்லாது தென் மாவட்டங்களிலும் விடாது கொட்டித்தீர்த்த மழையால் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. மதுரை, தேனி மாவட்டங்களில் நேற்று மாலை லேசான சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் வேகமெடுத்து பெய்யத் தொடங்கியது. விடிய விடிய மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தொடர்மழை காரணமாக சுருளி, கும்பக்கரை ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் வராக நதியிலும் நீர் அதிக அளவு செல்வதால் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புவியரசன், அரபிக்கடலின் தென்கிழக்குப் பகுதி குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிற மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 2 முதல் 4ஆம் தேதி வரைக்கும் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி டிசம்பர் 2 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் அது வடக்கு ஆந்திரா தெற்கு ஓடிசா நோக்கி நகரக்கூடும் எனவும் டிசம்பர் 4ஆம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் எனவும் கூறிய புவியரசன், மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலோர பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கூறினார்.
Recommended Video
புயல் உருவான பின்னரே அந்த புயலுக்கு பெயர் வைக்கப்படும் என்றும் வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.