மும்மொழிக் கொள்கை சாத்தியமா, தடையா.. அழுத்தம் திருத்தமாக கருத்துக்களை அடுக்கி வைத்த மாணவிகள்
சென்னை: சென்னை மயிலாப்பூர் ரோசரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மும்மொழிக் கொள்கை சாத்தியமா, தடையா என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில் மாணவிகள் தங்களது கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக எடுத்து வைத்து அசத்தி விட்டனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ரோசரி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடந்த விழாவில் மும்மொழிக் கொள்கை சாத்தியமா ? தடையா என்ற தலைப்பில் தமிழ் பட்டிமன்றத்திற்கு தமிழாசிரியர் எஸ்தர் ஏற்பாடு செய்திருந்தார். மொத்தம் இரண்டு பிரிவுகளில் எட்டு பேர்கள் கொண்ட குழுவிற்கு நடுவராய் எழுத்தாளர் லதா சரவணன் பங்கேற்றார்.
மும்மொழி தடையே என்ற தலைப்பில் மதுமதி, வேதா, ஸ்வேதா, ஸ்வாதி ஆகியோரும் மும்மொழி சாதகமே என்ற தலைப்பில் மேரி, ஸ்ருதிகா, சனா, அம்ரிஸ்னி ஆகியோரும் பேசினர்.
எடுத்துக்கொண்ட விஷயம் அரசியல் சாயம் பூசப்பட்டது. தங்கள் சொற்களில் அரசாங்கத்திற்கு கேள்வியும் குட்டும் வைத்திருந்தார்கள். கற்பது தவறல்ல கற்க வேண்டும் என்று வற்புறுத்துவதுதான் தவறு என்பதை ஆக்ரோஷமாகவும் ஆற்றாமையோடும் பேசினார்கள்.
வெறும் புத்தகபுழுக்களாக மட்டுமே இல்லாமல் தொன்மை மொழியான தமிழுக்கு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்றார்கள் மாணவிகள். எத்தனை சொல்லாடல்கள், எத்தனை உவமைகள், ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதில் என்ன தவறு ? அப்படியேன் கற்றுக்கொள்ள வேண்டும், அரசியலும் தமிழும் கலந்து நர்த்தனமாடியது மாணவிகளின் பேச்சுகளில், ரசிக்கும் படியான ரசனையோடு ஆழ்ந்த கருத்துக்களும் சிந்திக்கத்தூண்டும் விடயங்களும் பலவாறு ஒளிந்திருந்தது.
வள்ளுவனை அழகாக ஆரம்பித்த மதுமதியும், அழகான சென்னைத் தமிழ் கேள்விகளை தொடுத்து அதற்கு பதிலோடு அழகாக முடித்த வேதாவிற்கும் முதல் பரிசு வென்றவரும் இவரே.
கட்டாயப்படுத்தும் எதுவும் ஒதுக்கப்படும் என்பதை அழகாக சொன்ன ஸ்வேதா, ஸ்வாதி அவர்களுக்கும், எதை கொடுத்தாலும் அதை தடையென்று ஏன் ஒதுக்கவேண்டும் சாதிக்க வயது பெரும் தடையில்லை எனவே என்னால் எத்தனை மொழிகளையும் ஈடுபாடு இருந்தால் படிக்க முடியும் எனவே மும்மொழிக் கொள்கை சாத்தியமே என்று சனாவும், அம்ரிஸ்வினி, மேரி, ஸ்ருதிகா பேசினார்கள்.
பள்ளியில் ஆங்கிலம் தவிர்த்து வேறு ஏதாவது ஒரு மொழியில் பேசினால் உடனே அபராதப் பணம் போடும் காலம் தவிர்த்து இப்போது அநேக பள்ளிகள் தமிழ் மன்றம் அமைத்து அதற்கு விழா எடுத்து விருந்தினர்களை அழைத்து மாணவிகளுக்கு மதிப்பெண்கள் மட்டும் முக்கியம் இல்லை, வாழ்வியலை புரிந்துகொள்ளும் பேச்சும் எழுத்தும் முக்கியம் என்று ஊந்து சக்தியாக இருக்கும் ஆசிரியர்கள் கண்டு மனம் மகிழ்கிறது.
தமிழ் இனி மெல்ல சாகும் என்ற வார்த்தைகளை சொன்னவர்களுக்கு சவுக்கடியாய் இருந்தது இந்த மாணவிகளின் பேச்சு அற்புதமான வாதத்திறமைக்கு பரிசாக தீர்ப்பினையும் சொல்லவேண்டும் அல்லவா ?
தீர்ப்பு - கரண்டி கொண்டு திணிக்கப்படும் உணவில் உணவின் வை யை நாம் எப்படி உணரமுடிவதில்லையோ அதே போல் கட்டாயத் திணிப்பில் மொழி பதியப் போவதும் இல்லை. விருப்பம் இன்றி தரப்படும் கல்வியறிவு வயிறார உண்டவனுக்கு மீண்டும் விருந்து படைப்பதைப் போல பெரும் சுமையாகிப் போகும்.