அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல.. உழவர் திருநாள்!
சென்னை: உலக நாகரீகங்கள் அனைத்துக்கும் முன்னோடியான மூத்த குடியான தமிழர்கள் அறுவடை விழாவை பொங்கல் திருநாளாக ஆதி காலம் தொட்டே கொண்டாடி வருகின்றனர்.
புரட்டாசி மாதம் முதல் மார்கழிவரை மழைக்காலம். இக்காலங்களில் நீர்நிலைகள் நிறைந்து வேளாண் தொழில் சிறப்பாக நடைபெறும். தை முதல் நாள் காலம் என்பது அறுவடை காலமாகும்.
ஆகையால் தங்களது வேளாண் தொழிலுக்கு உதவிய இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில்தான் அறுவடை விழா அல்லது பொங்கல் திருவிழாவை தமிழ்ச் சமூகம் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வருகிறது.
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல என்ற பொங்கல் விழாவை சிறப்பித்து சொல்கிறது புறநானூற்றின் 22-வது பாடல். இது குறந்தோழியூர் கிழார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட பாடல். சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை அவர் விவரிக்கிறார்.
நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைஇத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினை பதிவு செய்துள்ளனர். சங்க இலக்கியங்களுக்கு பிந்தைய காலகட்டத்திலும் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல் என சிறப்பிக்கிறது சீவக சிந்தாமணி.
இப்படி காலந்தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக இருந்த பொங்கல் விழா, தமிழறிஞர்கள் முயற்சியாலும் திராவிடர் இயக்கத்தின் தாக்கத்தாலும் மக்கள் இணைந்து கொண்டாடும் மகத்தான விழாவாக உருவானது.
திராவிடர் இயக்கம் பொங்கல் விழாவை திராவிடர் திருநாளாக கொண்டாடியது. இதற்காக கிராமங்கள்தோறும் இயக்கங்கள், கழகங்கள் என அமைப்புகள் உருவாக்கப்பட்டு தமிழரின் பண்பாட்டு அடையாளம்/ பண்பாட்டு திருவிழா இதுதான் என புதிய தலைமுறைகளுக்கு வரலாற்றை பதிய வைத்தது.
இன்றைய தமிழர் வாழ்வில் எண்ணற்ற, அர்த்தமில்லாத அறிவியலுக்கு முரணான பண்டிகைகள், கொண்டாட்டங்கள் இரண்டற கலந்துவிட்டன. இருந்த போதும் தமிழர் வாழ்வியல் அடிப்படையில், இயற்கையை அடிப்படையாக வைத்து கொண்டாடப்படுகிற ஒரே திருவிழாக காலந்தோறும் பொங்கல் இருந்து வருகிறது.
முதல்நாள் பொங்கல் திருவிழா முடிந்த பின்னர் உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளை வணங்குகிற மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டிதான் ஏறு தழுவுதல் எனப்படுகிற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றனர்.
தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்ப்பதும் அதனுடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த ஒரு வாழ்க்கை முறை. இதனைத் தொடர்ந்து உற்றார் உறவுகளை கண்டு மகிழும் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இப்படி பொங்கல் விழாக்கள் அனைத்தும் இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சமூகம் கொண்டாடி மகிழ்கிறது.