21 நாள் லாக்டவுனை பயனுள்ள வகையில் கழிக்க டிப்ஸ்.. டெலிகிராமில் தமிழ் புத்தகங்கள்! இலவசமாக படிக்கலாம்
சென்னை: கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் லாக் டவுன் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.
இந்த 21 நாட்களும், எந்த ஒரு தொழிற்சாலைகளும் இயங்காது, வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கக்கூடிய நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அதை கொடுக்க வேண்டும் என்பதுபோல மோடி அறிவுறுத்தி இருந்தார்.
இதையடுத்து, ஒட்டுமொத்த நாடும் ஸ்தம்பித்து போயுள்ளது. அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிப் போய் இருக்கிறார்கள்.
இத்தனை நாட்களாக, பரபரப்பாக இயங்கி விட்டு, திடீரென வீட்டுக்குள்ளேயே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். இன்னும் சிலருக்கு மன சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் நாம் எதற்காக எதிர்மறையாக மட்டுமே யோசிக்கவேண்டும்? நேர்மறையாகவும் யோசிக்கலாமே! இத்தனை நாட்களாக நமக்கு நேரமில்லை என்று சொல்லி, எதையெல்லாம் செய்ய முடியாமல் தவித்தோமோ, அதை இந்த 21 நாட்களில் செய்து நமது ஆசையை பூர்த்தி செய்து கொள்ளலாம். இது வருங்கால வளர்ச்சிக்கான முதலீடாகவும் அமையக்கூடும்.
எப்படி என்கிறீர்களா? நம்மில் பெரும்பாலானோருக்கு புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பணி சுமை காரணமாக நேரம் கிடைக்காமல் இத்தனை நாட்களாக அதை தவிர்த்து வந்திருப்போம். அந்த அடிமனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். இதற்காகவே ஆன்லைனில் பலதரப்பட்ட புத்தகங்களை இலவசமாக படிக்க கூடிய வாய்ப்புகள் இப்போது ஏராளமாகக் கிடைக்கின்றன.
அதில் ஒரு ஆன்லைன் ஆப்ஷன்தான், டெலிகிராம் என்ற செயலி மூலமாக புத்தகங்களைப் படிப்பது.
இதுபோன்ற சேவைக்காகத்தான், நூலோடு உறவாடு என்ற ஒரு டெலிகிராம் குழு இயங்கி வருகிறது. https://t.me/noolodu_uravaadu குழுவில் நீங்கள், உங்களிடம் உள்ள புத்தகங்களின் பிடிஎப் ஃபைல்களை ஷேர் செய்யலாம். அதேபோல அதில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அவர்களிடம் உள்ள புத்தகங்களையும் பகிர்ந்துகொள்வார்கள்.
இவ்வாறு வீட்டிலிருந்தபடியே ஒரு நூலகத்தில் இருக்கக்கூடிய அனுபவத்தை உங்களுக்கு இந்த குழு தரும். மேலும், நீங்கள் படித்த புத்தகம் தொடர்பாக குழு உறுப்பினர்களுடன் ஆக்கப்பூர்வமாக உரையாடலாம். அவர்கள் எந்தெந்த புத்தகங்களை பரிந்துரைக்கிறார்கள் என்பதை நீங்கள் கேட்டறியலாம்.
நீங்களும் உங்களுக்கு பிடித்த புத்தகத்தை பரிந்துரை செய்யலாம். இப்படி ஆக்கபூர்வமாக நாம் இந்த நாட்களை செலவிட முடியும். வீட்டுக்குள் இருந்தபடியே அத்தனை வகையான தமிழ் புத்தகங்களையும் ஒரே இடத்தில் தேடிப் படிப்பது கண்டிப்பாக மனச் சோர்வை விரட்டி உங்களை உற்சாகமாகவும் மாற்றிவிடும்.
இதேபோல KNOWLEDGE HUB தமிழ் என்ற ஒரு டெலிகிராம் குழுவும் இயங்கிக்கொண்டிருக்கிறது. இங்கும் நீங்கள் பல்வேறு நூல்களை வாசிக்க முடியும்.