நாற்காலி மீது கண்.. ஆளுக்கு ஆயிரம் ஆசைகள்.. வச்சு செய்வார்களா மக்கள்.. அல்லது தூக்கி வைப்பார்களா!
நடிப்பு பிரபலத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு முதல்வர் பதவிக்கு ஆசைப்படகூடாது
சென்னை: சும்மா சொல்லக் கூடாது.. கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் அரசியல் பேசிய ரஜினி, லேசு பாசாக தனது உள்ளக்கிடக்கையையும் வெளிப்படுத்தி விட்டார். அதை விட முக்கியமாக போகிற போக்கில் முதல்வரை அவர் சீண்டி விட்டது அதிமுகவினரை காயப்படுத்தியுள்ளது.
ஆனால் தற்போதைய தமிழக நிலவரத்தைப் பார்த்தால் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு முதல்வர் பதவி மீது நிறையவே ஆசை இருப்பதை அனுமானிக்க முடிகிறது. இந்த பட்டியலில் விஜய்யையும் சேர்க்கிறார்கள் அரசியல் குறித்த பார்வையாளர்கள்.
கமல் விழாவில் ரஜினி பேசிய நேற்று இன்று நாளை பல மெசேஜ்களை மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்த்துள்ளது. எடப்பாடியாருக்கு நடந்த அற்புதம் தொடரும் என்று அவர் கூறியுள்ளது தனக்கும் என்றுதான் அர்த்தம் என்று பலரும் கூறுகிறார்கள்.
திமுகவினர் கைகள் புளியங்கா பறிக்காது... ராஜேந்திரபாலாஜிக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர். பதிலடி
முதல்வர் பதவி
ரஜினியின் அற்புதம் இருக்கட்டும்.. முதல்வர் பதவி என்ற நாற்காலி மீது பலருக்கும் இன்று இருக்கத்தான் செய்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரும் ஆளுமைகள் போய் விட்ட நிலையில் அவர்கள் ஏற்படுத்திய வெற்றிடத்தை இன்னும் யாரும் நிரப்பவில்லை என்பதே உண்மை. அதை நிச்சயம் யாராலும் நிரப்ப முடியாது என்பதும் உண்மைதான் (உண்மை சில நேரம் கசக்கத்தான் செய்யும்)
ஜெயலலிதா
கமலாகட்டும், ரஜினியாகட்டும்.. அல்லது வேறு யாருமாகட்டும்.. கருணாநிதி இடத்தை நிச்சயம் நிரப்ப முடியாது. ஜெயலலிதா இடத்தையும் நிரப்பமுடியாது. இருவேறும் பல வகைகளில் அழுத்தமான முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றுள்ளனர்.. சமூகத்திலும், மக்கள் மனதிலும். நேற்று கமல் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் மற்றும் நாளை ரஜினி ஆரம்பிக்கப் போகும் கட்சி ஆகியவை எந்த வகையான அற்புதத்தை, ஆச்சரியத்தை மக்களுக்கு காட்டப் போகிறது என்பது எதிர்பார்ப்புக்குரிய ஒன்றுதான்.
விஜய்
அதேசமயம், நாளைய அரசியல் வானில் இவர்களோடு சேர்த்து விஜய்யும் வலம் வரும் வாய்ப்பையும் யாரும் மறுக்க முடியாது. காரணம், விஜய்யை அந்தப் பாதையில்தான் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தொடர்ந்து நகர்த்திக் கொண்டு போகிறார். இதை கமல் பட விழா மேடையிலும் அவர் வெளிப்படையாகவே கூறி விட்டார். தம்பிகளுக்கு வழி விட வேண்டும் என்று அவர் சொன்னது விஜய்யை மனதில் வைத்துத்தான். ஒருவேளை அவர் சொன்ன தம்பிகள் என்பது நாளை விஜய் - அஜீத் என்று கூட மாறலாம். இன்று ரஜினி, கமல் என்று இருப்பதைப் போல. அரசியலிலும் கூட விஜய் - அஜீத் வலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான். ராஜேந்திர பாலாஜி கூட அஜீத் வரக் கூடும் என்று சூசகமாக சொல்லியிருப்பதை மறுக்க முடியாது.
திராவிட அரசியல்
என்ன ஆச்சரியம் என்றால் தமிழ்நாடு மக்களிடையே இன்னும் நடிகர்கள் மீது பெரும் ஈர்ப்பு இருப்பதுதான். இத்தனை கால திராவிட அரசியல் மக்களிடையே நட்சத்திர மோகத்தை அப்படியே தளர விடாமல் வளர வைத்து தக்க வைத்துள்ளதா என்ற சந்தேகமும் கூட ஏற்படுகிறது. காரணம், சினிமா மோகத்தையும், திராவிட இயக்கங்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. எனவே அடுத்த முதல்வர் யார் என்பதை விட எந்த நடிகர் அடுத்த முதல்வராக வரப் போகிறார் என்ற பேச்சுக்கள் இப்போது கிளம்பி விட்டன.
எச்சரிக்கை
ஆனால் இப்படி திரையுலகினர் பின்னால் மக்கள் போவது என்பது மிகவும் அபாயகரமானது என்று அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இதுகுறித்து சென்னை லயோலா கல்லூரியின் சமூகவியல் துறை தலைவர் டாக்டர் கிளாட்ஸ்டோன் சேவியர் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், "மக்களின் சிந்தனை அப்படியேதான் உள்ளது. புதுப்பிக்கப்படவில்லை. புதுமையான சிந்தனைக்கு மாற மக்கள் தயாராகவும் இல்லை. புதிய தலைவர்களை அவர்கள் தேட முயற்சிப்பதில்லை.
நிர்ப்பந்தம்
மக்கள் முன்பும் புதிய தலைவர்கள், புதுமையான முயற்சிகள் முன் வைக்கப்படுவதில்லை. மாறாக, வாரிசு அரசியலும், சினிமா நட்சத்திரங்களும்தான் அணி வகுத்து நிற்கிறார்கள். இவர்களில் ஒருவரைத்தான் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயமும், நிர்ப்பந்தமும் மக்களுக்கு உள்ளது. இதிலிருந்து வெளியே வந்து அவர்களால் சிந்திக்க முடிவதில்லை.
கசப்பான உண்மை
அரசியல்வாதிகளும் கூட மக்களிடையே புதிய சிந்தனையை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதில்லை. மக்களும் கூட சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்பதை புரிந்து கொள்வதில் தவறு செய்கின்றனர். தங்களுக்கான தேவை என்ன என்பதை அவர்களால் சரியாக கணிக்க முடிவதில்லை. இத்தனை காலம் முற்போக்கு இயக்கங்கள் பல்வேறு பணிகளைச் செய்த போதிலும், நாம் இன்னும் சினிமா ஸ்டார்கள் பின்னால்தான் ஆர்வத்துடன் போவதில் அக்கறை காட்டுகிறோம் என்பது கசப்பான உண்மையாகும். சினிமா நடிகர்கள்தான் சமூக அவலங்களைப் போக்குவார்கள், நல்லாட்சி தருவார்கள் என்றும் நாம் நம்புகிறோம். இது வேதனைக்குரியது.
மூலதனம்
ஒரு நடிகர் அரசியலுக்கு வருவதிலும், மக்களுக்கு தலைமை தாங்குவதிலும் எந்தத் தவறும் இருக்க முடியாது. ஆனால் அந்த நபர், மக்களுடன் நல்ல இணக்கமான தொடர்பு வைத்திருக்க வேண்டியது அவசியம். அவர்களின் பொதுப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டியது முக்கியம். மக்களின் பிரச்சினை என்ன என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான தீர்வுகளை அவர்கள் முன் வைக்க வேண்டும். அப்படி இல்லாமல் நடிப்பு பிரபலத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு நேரடியாக முதல்வர் பதவியில் ஆசைப்படுவது தவறானது என்று சொல்கிறார் சேவியர்.
மக்கள் பிரச்சனைகள்
பேராசிரியர் சேவியர் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. இன்று நிறையப் பேர் பதவி, அதிகாரத்தை மட்டுமே மனதில் கொண்டு அரசியலுக்கு வருகிறார்கள். குறிப்பாக நடிகர்கள். பார்ட் டைம் அரசியல்வாதியாக இருக்கும்வியர்வை சிந்தி மக்களுக்காக உழைத்த வரலாறு கிடையாது. ரஜினி கூட தேர்தல் சமயத்தில் மட்டும்தான் கட்சி ஆரம்பிப்பேன், அரசியலுக்கு வருவேன், 234 தொகுதிகளையும் பிடிப்பேன் என்று சொல்கிறாரே தவிர மற்ற நேரங்களில் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கூட கொடுக்க முன்வருவதில்லை.. இதைத்தான் அபாயகரமானது என்று அனைவரும் கருதுகிறார்கள்.
பார்க்கலாம்.. மக்கள் யாரை உயர்த்தப் போகிறார்கள்.. யாரை வச்சு செய்ய போகிறார்கள் என்பதை!