தமிழே தெரியாமல் தமிழ்நாட்டில் நீதிபதியா.. தமிழ் மொழியை இல்லாமல் ஆக்கும் வேலை இது.. சீமான் சாடல்
தமிழே தெரியாமல் தமிழ்நாட்டில் நீதிபதியா என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்
சென்னை: "தமிழே தெரியாமல் எப்படி தமிழ்நாட்டில் நீதிபதியாகிவிட முடியும்? தமிழ் தெரியாத நீதிபதிகளால், கோர்ட்டில் நடக்கும் வக்கீல்களின் வாதங்களை, மக்களின் சாட்சியங்களை, மண்ணின் வாழ்வியல் பண்பாட்டு அம்சங்களை எப்படி புரிந்து கொள்ள முடியும்? கோர்ட்டிலும் தமிழ் மொழியை இல்லாமல் ஆக்குகிற வேலை இது" என்று சீமான் தெரிவித்துள்ளார். தமிழ் தெரியாதவர்கள் சிவில் நீதிபதிகளாக ஆகிவிடலாம் என்கின்ற வகையில், தமிழக அரசின் அறிவிப்பாணையை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை காட்டமான அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார் சீமான்!
சிவில் நீதிபதி தேர்வு தமிழ் தெரியாதவர்களும் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பாணையை அரசு சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இதற்கு வழக்கறிஞர்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தும், அந்த அரசு அறிவிப்பாணையை மீண்டும் பெற வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கூட, "தமிழ் தெரியாதவர்களை சிவில் நீதிபதிகளாக நியமித்தால் கீழமை நீதிமன்றங்கள் இந்தியிலும், பிற மொழிகளிலும் இயங்கும் நிலை உருவாகி விடும். இது நல்லதல்ல" என்று ஏற்கனவே எச்சரித்து இருந்தார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் இது குறித்து அறிக்கை வெளியிட்டு, உண்ணாவிரதம் இருந்து வரும் வழக்கறிஞர்களுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை இதுதான்:
புதுச்சேரியை பேசாம திருநங்கைன்னு சொல்லிடுங்களேன்.. நாராயணசாமி அதிரடி கோரிக்கை!
மத்திய அரசு
"உயர்நீதிமன்றங்களில் தமிழ் மொழி பயன்படுத்திட அனுமதி வேண்டி நீண்டகாலமாக வழக்கறிஞர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் நியாயமான கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்காமல் புறந்தள்ளி வருவதென்பது சகிக்க முடியாதப் பெருங்கொடுமை. உயர்நீதிமன்றங்களில் ஏற்கனவே தமிழ் மொழி இல்லாத நிலைமை நீடிக்கிறது.
அழிவின் விளிம்பு
இப்போது எளிய மக்கள் இறுதியான நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற கீழமை நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியை இல்லாமல் ஆக்குகிற வேலையை மத்திய, மாநில அரசுகள் செய்யத் தொடங்கி இருப்பது என்பது ஏற்கனவே அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிற தமிழ்மொழியை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான செயல்திட்டமேயாகும்.
நீதி பரிபாலனை
தமிழ்மொழி தெரியாமலேயே தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் நீதிபதியாக ஆகிவிட முடியும் என்கிற நிலையை உருவாக்குவதன் மூலமாக தமிழ்நாட்டு நீதிமன்றங்களை தமிழ்மொழி தெரியாத, தமிழர்கள் அல்லாதவர்களின் கையில் ஒப்படைப்பதற்கான பெரும் சதியாகவே இதைக் கருதுகிறேன். அவ்வாறு நடந்தால் சாமானிய மக்கள் தங்களது இறுதி நம்பிக்கையாக கொண்டிருக்கிற நீதி பரிபாலன முறை முற்றிலுமாக தகர்க்கப்படும். தமிழ்மொழி தெரியாத நீதிபதிகள் நீதிமன்றங்களில் வந்து அமரும்போது மக்களின் சாட்சியங்களை, வழக்கறிஞர்களின் வாதங்களை, நமது மண்ணின் வாழ்வியல் பண்பாட்டு அம்சங்களை புரிந்து கொள்ள முடியாமல் தவறாக தீர்ப்பு வழங்கி விடக்கூடிய மாபெரும் அபாயம் இன்று தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.
போராட்டம்
இந்த அபாயத்தை புரிந்து கொண்டுதான் பெருமதிப்பிற்குரிய வழக்கறிஞர்கள் பெருமக்கள் தமிழ் சமூகத்தை காப்பாற்றிட மாபெரும் போராட்டங்களை தொடங்கியுள்ளார்கள். தமிழ்ச்சமூகத்தின் எல்லாவித போராட்டங்களிலும் இந்த மண்ணைக் காக்க தமிழர்களின் உரிமையை காக்க இரத்தம் சிந்தி உறுதியாகப் போராடி வருபவர்கள் தமிழக வழக்கறிஞர் பெருமக்கள் ஆவர். ஈழ விடுதலை ஆதரவுப் போராட்டம் தொடங்கி எண்ணற்றப் போராட்டங்களில் வழக்கறிஞர்களின் உறுதியான போராட்டங்களே தமிழ் மண்ணை காக்கிற பெரும் ஆயுதங்களாக திகழ்கின்றன.
உண்ணாவிரதம்
தமிழ் தெரியாதவர்கள் சிவில் நீதிபதிகளாக ஆகிவிடலாம் என்கின்ற வகையில், 2016ல் தமிழக அரசு தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் ஆணை பிறப்பித்தது. இந்த TNPSC அறிவிப்பாணை 25/2019யைத் திரும்பப் பெறக்கோரி வழக்கறிஞர்கள் தமிழ்நாடெங்கும் இன்று நடத்துகிற மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு, அப்போராட்டம் மாபெரும் வெற்றியடைய எனது புரட்சிகர வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உறுதி
என்றென்றும் பெருமதிப்பிற்குரிய வழக்கறிஞர்கள் சமூகத்திற்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும், அவர்களது போராட்டத்தை முழுமையாக ஆதரித்து அவர்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடன் நிற்கும் என்றும் இத்தருணத்தில் உறுதியளிக்கிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.