விக்கிப்பீடியா, கூகுள் நடத்திய போட்டி.. இந்தி உட்பட பிற இந்திய மொழிகளை வீழ்த்தி தமிழ் முதலிடம்
சென்னை: விக்கிமீடியா அறக்கட்டளை மற்றும் கூகுள் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்திய மொழிகளுக்கு இடையே நடைபெற்ற கட்டுரை எழுதக் கூடிய போட்டியில், ஹிந்தி போன்ற மொழிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழ் முதலிடம் பிடித்துள்ளது.
விக்கிமீடியா மற்றும் கூகுள் ஆகியவை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இப்படி ஒரு கட்டுரைப் போட்டியை இந்த வருடம் நடத்தியுள்ளன. சுமார் 3 மாத காலமாக, தொடர்ச்சியாக ஒவ்வொரு மொழியிலும் விக்கிபீடியா இணையதளத்தில் கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்படுவதுதான் போட்டி.
டைகர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட இந்த போட்டி தமிழில் வேங்கை திட்டம் 2.0 என்று அழைக்கப்பட்டது.
அசத்திய தமிழர்கள்
இதன் ஒருங்கிணைப்பாளராக சாப்ட்வேர் என்ஜினீயரான நீச்சல்காரன் ராஜாராமன் செயல்பட்டு உள்ளார். அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை 3 மாதங்கள் இந்த போட்டி நடந்துள்ளது. கடந்த முறை தமிழ் இரண்டாவது இடத்தையும், பஞ்சாபி (குர்முகி எழுத்து வடிவம்) முதல் இடத்தையும் பிடித்துள்ளது. பஞ்சாபி கடைசி நேரத்தில் அதிக கட்டுரைகளை சமர்ப்பித்து முதலிடம் பிடித்தது. எனவே, இந்த முறை தமிழ் கட்டுரையாளர்கள் முதலிலேயே திட்டமிட்டு சிறப்பாகச் செயல்பட்டு அதிக கட்டுரைகளை சமர்ப்பித்து உள்ளனர்.
தமிழ் அபாரம்
தமிழில் 62 பேர் மொத்தம் 2959 கட்டுரைகளை எழுதியுள்ளனர். இந்த முறையும் பஞ்சாபி (குர்முகி எழுத்து வடிவம்) மொழி கடும் சவாலை கொடுத்துள்ளது மொத்தம் 34 பேர் பஞ்சாபியில், 1768 கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர். எனவே, இந்த வருடம் பஞ்சாபி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை வங்க மொழி பிடித்துள்ளது. 49 பேர் 1460 கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர்.
ஹிந்தி பின்னால் போனது
உருது மொழியில் 1377 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 25 பேர் எழுதியுள்ளனர். சந்தாலி மொழியில் 566 கட்டுரைகளும், 18 கட்டுரையாளர்களும், பங்கேற்றனர். நாட்டில் அதிகம் பேரால் பேசக்கூடிய மொழி ஹிந்தி. தற்போது இணைய பயன்பாட்டில் ஹிந்தி மொழியின் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது. ஆனால் வெறும் 417 கட்டுரைகளை மட்டுமே அவர்களால் சமர்ப்பிக்க முடிந்தது. 26 கட்டுரையாளர்கள் இந்தி மொழிக்கு பங்களிப்பை அளித்துள்ளனர். எனவே இந்தி மொழி ஆறாவது இடத்தைதான் பிடிக்க முடிந்தது.
பக்கத்து மொழிகள்
தெலுங்கு மொழியில் 416 கட்டுரைகள், கன்னட மொழியில் 249 கட்டுரைகள், மலையாளத்தில் 229 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக மராத்தி மொழியில் 220 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மலையாள கட்டுரையாளர்கள் எண்ணிக்கை வெறும் 8 மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. சமஸ்கிருதத்தில் 19 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மொத்தம் 4 கட்டுரையாளர்கள் இந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
நிபந்தனைகள்
கட்டுரை என்றால் ஏனோதானோ என்று கிடையாது. குறைந்தது 300 சொற்களை கொண்டதாக அது இருக்க வேண்டும். இந்த கட்டுரையில் போதிய சான்றுகள் இடம்பெற்றிருக்க வேண்டும். கூகுள் மொழிபெயர்ப்பு போன்றவை ஏற்கப்பட மாட்டாது. எந்த மொழியில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டிருந்தாலும் அது கட்டுரையாளரின் சுயமான மொழிபெயர்ப்பாக இருக்க வேண்டும், என்பது போன்றவை இதில் நிபந்தனைகள்.
கணவர், மனைவி
சேலம் நகரைச் சேர்ந்த சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன், தமிழ் மொழியில் மொத்தம் 629 கட்டுரைகளை எழுதியுள்ளார். இதன் மூலம் தமிழ் முன்னிலை வகிப்பதற்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார். அவரது மனைவி வசந்த லட்சுமி 270 கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆகமொத்தம் இந்த தம்பதி மட்டும் 899 கட்டுரைகளை சமர்ப்பித்து தமிழ் மொழியின் மொத்த பங்களிப்பு உயர்வதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்துள்ளனர்.
"பொதுவாக எம் மனசு தங்கம்.. ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்..", "தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா" என்பது போன்ற பஞ்ச் வசனங்கள் வெறும் பேச்சளவில் மட்டும் கிடையாது. செயலிலும் தமிழர்கள் தனி முத்திரை பதிப்பார்கள், என்பதற்கு இந்த மாபெரும் வெற்றி ஒரு சாட்சி.