துளசேந்திரபுரத்தில் வெடித்து சிதறிய பட்டாசு.. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான 'தமிழச்சி' கமலா
சென்னை: அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 'தமிழச்சி' கமலா ஹாரிஸ் பதவியேற்றார்.

இதை அவரது மூதாதையர் வாழ்ந்த துளசேந்திரபுரத்தில் பட்டாசு வெடித்தும், விளக்கு ஏற்றியும் கொண்டாடி மகிழ்ந்தனர். மொத்த நாடும், தமிழகமும் கமலா ஹாரிசின் சாதனையால் மகிழ்ச்சி தருணத்தில் மிதந்து கொண்டு இருக்கிறது.

அமெரிக்க அரசியல் வரலாற்றில் வேறு எந்த பெண்ணும் அடைந்திராத உயரம் இது. உலகின் சக்திவாய்ந்த தேசத்தின் மிக சக்தி வாய்ந்த பெண்மணியாக கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளார்.

கமலா ஹாரிஸை துணை அதிபராக உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவரும் கருப்பினத்தைச் சேர்ந்த பெண் என்பது இந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக இருந்தது.

அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்கும் முதல் கறுப்பின பெண் என்ற பெருமையை 55 வயதான கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் தாயார் ஷியாமலா கோபாலன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். கமலா ஹாரிஸின் தாய் வழி தாத்தா, திருவாருர் மாவட்டத்தை சேர்ந்தவர். அங்குள்ள பைங்காநாடு கிராமத்தில் இருக்கும் துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர்தான் கமலா ஹாரிஸின் தாத்தா கோபாலன். இவர் ஆங்கிலேயர் காலத்திலேயே சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
