சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி காலமானார்- 'சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே- வைரமுத்து!
சென்னை: சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி (வயது 80) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சாயாவனம் நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர் சா. கந்தசாமி. 1940-ம் ஆண்டு மயிலாடுதுறையில் பிறந்தவர்.
சகாக்களுடன் இணைந்து கசடதபற என்ற இலக்கிய இதழை உருவாக்கினார். பின்னர் குறும்படங்களையும் இயக்கினார் சா. கந்தசாமி. சுடுமண் சிலைகள் தொடர்பான அவரது குறும்படம் சர்வதேச விருது பெற்றது.
சிற்பி தனபால், ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோரது வாழ்வை குறும்படங்களாக்கி உள்ளார். 1989-ல் சா. கந்தசாமியின் காவல் தெய்வங்கள் ஆவணப்படம், சைப்ரஸ் விழாவில் முதல் பரிசு பெற்றது.
சா. கந்தசாமியின் விசாரணை கமிஷன் நாவலுக்கு 1998-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சா. கந்தசாமி இன்று சென்னையில் காலமானார்.
மறைந்தாரே சா.கந்தசாமி!
— வைரமுத்து (@Vairamuthu) July 31, 2020
‘சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே!
தன்மானம் - தன்முனைப்பு
தனி அடையாளமென்று மெய்வெளியில் இயங்கிய கலைஞன் அல்லனோ!
சதை அழிவுறும்; அவர் கதை அழிவுறாது.
அவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கவிஞர் வைரமுத்துவின் இரங்கல்:
மறைந்தாரே சா.கந்தசாமி!
'சாயாவனம்' சாய்ந்துவிட்டதே!
தன்மானம் - தன்முனைப்பு
தனி அடையாளமென்று மெய்வெளியில் இயங்கிய கலைஞன் அல்லனோ!
சதை அழிவுறும்; அவர் கதை அழிவுறாது
இவ்வாறு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
சா. கந்தசாமி மறைவுக்கு தி.முக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல்:
சாயாவனம்' என்ற புதினத்தின் வாயிலாகத் தமிழ் இலக்கிய உலகில் சாகாவரம் பெற்ற படைப்பாளி - சாகித்ய அகாடமி விருது பெற்ற சா.கந்தசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைகிறேன். எழுத்து என்பது வெற்று அலங்காரத்திற்கானதல்ல என்பதையும், அது காலம், கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றில் ஏற்படுத்தப்படும் தடைகளை உடைத்தெறியும் படைப்பாயுதமாக இருக்க வேண்டும் என்பதையும் வெளிப்படையாக அறிவித்து, அதன்படியே படைப்புகளை வழங்கியவர் சா.கந்தசாமி.
இன்றைய நிலையில் அவருடைய கருத்தும் படைப்பும் மிகவும் தேவைப்படும் சூழலில் அவர் நம்மைவிட்டு மறைந்துவிட்டார். நாட்டுப்புறவியலையும், நவீன இலக்கியக் கூறுகளையும் சமமான அளவில் தன் படைப்புகளில் வெளிப்படுத்திய சா.கந்தசாமி அவர்கள், கருணாநிதியின் பேரன்புக்குரியவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இலக்கிய அன்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழின் மூத்த எழுத்தாளரான திரு. சா.கந்தசாமி அவர்கள் காலமான செய்தி அறிந்து துயரமடைந்தேன். 1/3
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 31, 2020
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல்
தமிழின் மூத்த எழுத்தாளரான திரு. சா.கந்தசாமி அவர்கள் காலமான செய்தி அறிந்து துயரமடைந்தேன். தனித்துவமான இலக்கிய ஆளுமையாக தேசிய அளவில் அறியப்பட்டிருந்த அவர், சாகித்திய அகாடமியின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்து தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி இலக்கியங்களையும், அதனை படைப்பவர்களையும் பல வகைகளில் கொண்டாடுவதற்குத் தூண்டுகோலாக திகழ்ந்தார்.
நாவல், சிறுகதை, கட்டுரை, ஆவணப்படம் என அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் உருவாக்கிய படைப்புகள் என்றைக்கும் சா.கந்தசாமி அவர்களின் புகழ்பாடும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.