ராமதாஸ் செய்தால் வரவேற்பு, நான் செய்தால் எரியுதா: திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் சீறிய வேல்முருகன்
சென்னை: ராமதாஸ் செய்தால் வரவேற்பவர்கள், நான் செய்தால் வயிறு எரிகிறார்கள் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் பிறந்த நாள் விழா நேற்று இரவு சிதம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
சமூக நீதி சங்கங்களின் ஒற்றுமை என்ற பெயரில் இசை அரங்கம், வாழ்த்தரங்கம் என்ற பெயரில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் பால அறவாழி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளரும், காட்டுமன்னார்கோயில் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச்செல்வன் முன்னிலை வகித்தார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர் தாக்குதல்.. தமிழக அரசுக்கு வேல்முருகன் முக்கிய கோரிக்கை!
பாராட்டி பேசியவர்கள்
இந்நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். அவரைப் பாராட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருமாவளவனை வாழ்த்தி பேசினர்.
வேல்முருகன் எம்எல்ஏ
அப்போது திருமாவளவனை வாழ்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ பேசியதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒரு நல்ல தலைவரை பெற்றிருக்கின்றார்கள். பொதுக்கூட்டம், மாநாடு, இலக்கிய கூட்டம் போன்ற ஒவ்வொன்றிலும் எப்படி பேச வேண்டும் என்று தெளிவு பெற்ற பேராசிரியரின் பேச்சைப்போல திருமாவளவன் பேச்சுக்கள் உள்ளது. அம்பேத்கருக்கு பிறகு இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக போராடிக் கொண்டிருப்பவர் திருமாவளவன்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்காக பேசிய திருமா
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட போது இந்திய நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் அல்லாத ஒரு தலைவர் பேசினார் என்றால் அது திருமாவளவன்தான். இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது ஆயிரமாயிரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கொண்டு வந்து போராட்டம் நடத்தியது திருமாவளவன்தான்.
சமூக நீதி அரசியல்
நான் சார்ந்திருக்கிற வன்னியர் சமூகத்தில் உள்ள பாலாஜி என்பவரை திருமாவளவன் கைகாட்டி அவரது கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியிருக்கிறார். திருமாவளவன் அடையாளம் காட்டுகிறார். அந்த தொகுதியில் உள்ள அத்தனை சாதி மக்களும் வாக்களிக்கிறார்கள். சமூகநீதி அரசியலுக்குள் வந்து நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.
எம்எல்ஏவாக காரணம்
உலகின் அத்தனை பிரச்சனைகளையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டு பேசக்கூடிய தலைவர் திருமாவளவன். திருமாவளவன் படம் எல்லா இடங்களில் இருக்கிறது. ஆனால் அதில் பலரும் ஓட்டு போடுவதில்லை. அந்த சமூகத்து மக்கள் திருமாவளவனை தங்கள் சமூகத்திற்கான பாதுகாப்பாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் வாக்களிப்பதில்லை. அரசியல் அதிகாரம் கைக்கு வருவதற்கு திருமாவளவன் கை காட்டுபவர்களுக்கு அந்த சமூகத்து மக்கள் வாக்களிக்க வேண்டும். ஒரே ஒருமுறை திருமாவளவன் சொல்வதைக் கேளுங்கள். எம்எல்ஏ என்ற மூன்றெழுத்து மூன்றாவது முறையாக எனக்கு கிடைத்ததற்கு காரணம் விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். எனது வெற்றியை உறுதி செய்தது விடுதலை சிறுத்தைகள்தான்.
ராமதாஸ் செய்தால் வரவேற்கிறார்கள்
திருமாவளவனை நான் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்தால் சிலருக்கு எரிகிறது. அதையே ராமதாஸ் செய்தால் வரவேற்கிறார்கள். வேல்முருகன் செய்தால் எதிர்க்கிறார்கள். திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி தருவதற்கு கூட பாஜக கும்பல் தயாராக இருக்கிறது. ஆனால் சங்பரிவார் போன்ற மதவாத அமைப்புகளிடம் திருமாவளவன் ஒருபோதும் அடி பணிய மாட்டார். திருமாவளவனோடு சரிக்கு, சமமாக விவாதிக்கிற ஒரு அறிவுஜீவி கூட தமிழக பாஜகவில் இல்லை என வேல்முருகன் எம்எல்ஏ பேசினார்.