விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக களம் இறங்கும் வேல்முருகனின் வாழ்வுரிமை கட்சி
சென்னை: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் திமுக கூட்டணியே வெற்றி வாகை சூடும் என்றும் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்குக் களப்பணியாற்றிடுவோம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்துள்ளது.
வரும் அக்டோபர் 21ம் தேதி காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் திமுக கூட்டணியில் திமுக விக்கிரவாண்டி தொகுதியிலும், காங்கிரஸ் கட்சி நாங்குநேரி மற்றும் காமராஜர் நகர் தொகுதியிலும் (புதுச்சேரி போட்டியிடுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா. புகழேந்தி போட்டியிடுகிறார். இவருக்கு வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு அளித்துள்ளது
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் "விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாகவுள்ள நிலையில் வரும் அக்டோபர் 21ந் தேதியன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தேர்தலில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுகவின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் போட்டியிடவுள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலைப் போலவே இந்த முறையும் இடைத்தேர்தல்களிலும் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்குக் களப்பணியாற்றிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியர்கள் அதிகம் நிறைந்த விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வேல்முருகனின் வாழ்வுரிமை கட்சி திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.