ஆரிய தேசமாக இந்தியாவை மாற்றத்தான் இந்தி திணிப்பு.. வேல்முருகன் காட்டம்
சென்னை: இந்தி திணிப்பு என்பதை, உடும்பு பிடியாக பிடித்துக் கொண்டிருப்பது ஏன் என்று மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அவரவருக்கு தாய்மொழி எதுவாக இருந்தாலும், ஒரே நாடாக இருக்க இந்தியைத்தான் அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார் பாஜக தலைவர் அமித்ஷா. ஒரே நாடாக இருக்க இந்தியை தான் எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார் பிரதமர் மோடி.
1949 செப்டம்பர் 14 இல் இந்தியை அலுவல் மொழியாக இந்தியா ஏற்றுக் கொண்டது என்கிறார்கள். அப்படி என்றால், இந்திய குடியரசுக்கு முன்பு ஒரு தற்காலிகமாக பின்பற்ற இந்தி மொழியை நாட்டின் ஒரே மொழி என்று இவர்கள் சொல்வதற்கு என்ன காரணம்?
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இருவருமே குஜராத்திகள். குஜராத்தை தாய்மொழியாக கொண்டவர்கள். அது ஆரிய மொழி குடும்பத்திற்குள் வருகிறது. ஆரிய மொழிக்குடும்பத்தில் தான் இந்தியும் இருக்கிறது. இந்தி மிக மிக பிறகு உருவான ஒரு மொழி. அது மரபு ரீதியாக உருவான மொழி அல்ல. மொழி என்பது மனிதனுக்கு பிறப்புரிமை, மரபுரிமையாகும். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கியது தான் மொழி. அப்படிப்பட்ட மொழி ஆரிய மொழிக்குடும்பத்தில் எந்த மொழியும் கிடையாது. இந்தி, குஜராத்தி உட்பட. ஆனால் அந்த சிறப்பு தமிழ் மொழிக்கு மட்டும்தான் உண்டு.
தமிழ்மொழி என்று தோன்றியது என்று நமக்கு தெரியாது. ஆனால் இன்று பாஜக உடும்பு பிடியாக இந்தியை தேசிய மொழியாக திணிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் என்னவென்றால், அது ஆரிய தேசமாக இந்த நாட்டை மாற்ற வேண்டும் என்பது தவிர வேறு எந்த காரணமும் கிடையாது.
நாட்டுக்கு நல்லது செய்வதற்கான எந்த கொள்கையோ, எந்த வழிகளும் பாஜகவிடம் கிடையாது. அதனால் தான் இந்தியை திணிக்க ஒற்றைக் காலில் நிற்கிறது. அதை இந்தியாவில் உள்ள அனைத்து மொழியினரும் அறிவார்கள்.
இந்த நாடு வேற்றுமையில் ஒற்றுமை காணக்கூடிய ஒரு நாடு. இந்த நாட்டில் ஒற்றை தன்மையை கொண்டுவர விரும்புகிறார்கள். ஒற்றைத் தன்மை என்பதன் பொருள், 'பாசிசம்'. மாற்று வழிகளுக்கும், மாற்றி கொள்கைகளுக்கும், இங்கு இடமில்லை. இதை தமிழர்கள் நன்கு அறிவார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, எந்த ஒரு மாநிலத்தவரும் இதை ஏற்க மாட்டார்கள்.
முற்போக்குக் கருத்துகளை கொண்ட இந்த உலகத்தில் இப்படிப்பட்ட எந்த ஒரு கொள்கையும் இல்லாமல் இந்தி மொழியை திணிக்க முயற்சிக்கிறார்கள். இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கிறது. இவ்வாறு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.