டெல்லி கலவரத்தில் உயிர்பலி... அமித்ஷா, கெஜ்ரிவாலுக்கு வேல்முருகன் கண்டனம்
சென்னை: டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தை மத்திய உள்துறையும், முதலமைச்சர் கெஜ்ரிவாலும் கண்டுகொள்ளாமல் விட்டதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
மேலும், கலவரத்தின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
உயிர்பலி
மூன்று நாட்களாக டெல்லியின் ஜாஃபராபாத், சந்த்பாக், மாஜ்பூர், குரேஜிகாஸ், பஜான்பூரா, கர்டாம்புரி ஆகிய பகுதிகள் கலவரக் காடாயின. இதுவரை 18 பேர் பலியாகினர். அதில் தலைமைக் காவலர் ரத்தன் லால் என்பவரும் ஒருவர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். கலவரத்தின்போது 200க்கும் மேற்பட்ட நபர்கள் மூவர்ணக்கொடி மற்றும் காவிக்கொடிகளை ஏந்தியபடி ‘பாரத் மாதா கி ஜெய்', ‘வந்தே மாதரம்' என்று முழக்கமிட்டுச் சென்றனர். அவர்கள் கண்ணில் பட்ட, தங்களுக்கு இடறலாகத் தெரிந்த பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள்; பெட்ரோல் பம்புகள் மற்றும் கடைகளைத் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.
பஜ்ரங் தள்
மேலும், முஸ்லிம்களாகப் பார்த்து அடித்தோ சுட்டோ கொன்றதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. கலவரத்தின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகள் இருந்ததாகக் குற்றம்சாட்டடப்படுகிறது. அந்த அமைப்புகளும் பாஜகவினரும் மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவி அடித்தட்டு மக்களைத் தூண்டிவிட்டுத்தான் இந்தக் கலவரத்தை அரங்கேற்றியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
குற்றச்சாட்டு
டெல்லியின் முதல்வர் கெஜ்ரிவாலோ, "வன்முறை வெடித்த தொகுதியில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததே கலவரம் நீடிக்கக் காரணம்" என்று குற்றம்சாட்டினார். இப்படி அவர் சொல்லக் காரணம், டெல்லி போலீஸ் ஒன்றிய உள்துறையின் கையில் இருப்பதே. ஆனாலும் மூன்று நாட்களாகக் கலவரம் தொடர்ந்தும் அதை முடிவுக்குக் கொண்டுவர அவர் எடுத்த நடவடிக்கையோ முயற்சியோ ஏதுமில்லை என்பதுதான் மொத்த இந்தியாவும் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு.
உள்துறை
எனவேதான் சொல்கிறோம், சமூகத்திற்கு எந்த வகையிலும் உதவாத மேல்சாதி-மேல்தட்டு மக்களின் ஆர்எஸ்எஸ்-பாஜக, சிஏஏ சட்டத்தால் தனிமைப்பட்டதன் விளைவே, மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவி அடித்தட்டு மக்களைத் தூண்டிவிட்டு டெல்லியில் கலவரத்தில் 18 பேர் பலி! இதற்குக் காரணமான ஒன்றிய உள்துறையை, அதன் கீழ் உள்ள டெல்லி காவல்துறையை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தனை நடந்தும் கண்டுக்கொள்ளாமல் இருக்கின்ற டெல்லி முதல்வரை கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.